சென்னைக்கு 4 சிறுவர்களை ரயிலில் கடத்த முயன்ற நபர் கைது
மானாமதுரை: மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 4 சிறுவர்களை ரயில் மூலம் கடத்த முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், உடைகுளம் கிராமத்தில் மண்பாண்ட தொழிலில் ஈடுபடும் குடும்பத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். பள்ளி விடுமுறை நாளான நேற்று, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற மர்மநபர் ஒருவர், அந்த சிறுவர்களுக்கு சாப்பிட உணவுப் பொருட்களை கொடுத்துள்ளார்.
இதில் தன்னையே மறந்த சிறுவர்கள் அந்த நபரை பின் தொடர்ந்து போயுள்ளனர். 4 சிறுவர்களை வழிநடத்தி சென்ற அந்த நபர், மானாமதுரை ரயில் நிலையம் வரை அழைத்து சென்றார். அதற்குள் மண்பாண்ட தொழிலில் ஈடுபடும் சரவணன், ரகு, முத்துபாண்டி ஆகியோரின் மகன்களான கிரிசோத்குமார், முத்துசெல்வம், சக்திவேல், ஜெகன் ஆகியோரை காணவில்லை என தேட துவங்கினர்.
அப்போது அப்பகுதியினர், சிறுவர்களை மர்மநபர் ஒருவரை அழைத்து சென்றதாக கூறினர். அதையடுத்து மானாமதுரை ரயில் நிலையத்திற்கு விரைந்த சிறுவர்களின் பெற்றோர் அங்கு சென்னை செல்லும் ரயிலில் சிறுவர்களை ஏற்றிக் கொண்டிருந்ததை கண்டனர்.
பொதுமக்களின் உதவியுடன் அந்த மர்மநபரை பிடித்த சிறுவர்களின் பெற்றோர், அவரை போலீசில் ஒப்படைத்தனர். பிள்ளைகளை மீட்க உதவிய பெண் மற்றும் ஆசிரியர் சேவியர் என்பவருக்கு நன்றிக் கூறிய பெற்றோர், மர்மநபர் மீது புகார் அளித்தனர். கடத்தல் நபரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications