அழகிரி மகன் தயாநிதி மீது சுரங்க ஊழல் புகார்: சிக்கலில் ஒலிம்பஸ் கிரானைட்ஸ்!

மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மதுரையில் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் மதுரையைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் பங்கு உண்டு. தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி நேற்று திடீர் என்று இந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
ஒலிம்பஸ் கிரானைட்ஸ் சட்டவிரோதமாக கிரானைட் எடுத்து வருகிறது. 10 சதவீத கிரானைட் எடுக்கத் தான் உரிமம் வாங்கியுள்ளனர். ஆனால் அதை மீறி 100 சதவீதம் கிரானைட் எடுக்கின்றனர். அவர்கள் பட்டா நிலத்திலும் கிரானைட் எடுத்துள்ளனர். தயாநிதி அழகிரிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டிற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன என்றார்.
மத்திய அமைச்சர் அழகிரி சட்டவிரோத கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் வேலுமணி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அதை மறுத்த அழகிரி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்குமாறும், இல்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறும் சவால் விட்டார். இதையடுத்து தான் முதல்வர் ஜெயலலிதா தன்னை ஒலிம்பஸ் கிரானைட்ஸில் சோதனை நடத்துமாறு உத்தரவிட்டதாக வேலுமணி தெரிவித்தார்.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் தயாநிதி அழகிரி ஒலிம்பஸ் கிரானைட்ஸில் இருந்து விலகிவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக கிரானைட் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிறுவனத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுற்றுப்புற கிராம மக்கள் புகார் கொடுத்தால் குவாரி உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேலுமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications