குளச்சலில் கடல் சீற்றம்: ராட்சத அலையில் சிக்கி 2 விசைப்படகுகள் சேதம்- ரூ. 1.2 கோடி இழப்பு
கு்ளச்சல்: குளச்சலில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகளில் சிக்கி 2 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ரூ. 1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குளச்சல் ஆழ்கடல் பகுதியில் நேற்று முன்தினம் கடும் சூறைக்காற்று வீசியது. இதனால் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இந்த நிலையில் அவர்கள் நேற்றும் தொழிலுக்கு செல்லவில்லை. சில மீனவர்கள் தொழில் உபகரணங்களை பழுது பார்த்தனர். சிலர் தற்போது பணி நடந்து வரும் குளச்சல் மீன்பிடி துறைமுக பகுதியில் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் காலை முதல் குளச்சல் கடல் சீற்றுத்துடன் காணப்பட்டது. அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து கடல் நீர் வழக்கத்தை விட பல அடி தூரம் கரைக்கு வந்து திரும்பின. மதியம் 1.45 மணி அளவில் திடீரென எழுந்த ராட்சத அலை, அலை தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த குளச்சலைச் சேர்ந்த ஜார்ஜ், தாசன் ஆகியோரின் விசைப்படகுகளின் நங்கூர கயிறு அறுந்து படகுகள் அலை தடுப்பு சுவரின் மீது தூக்கி வீசப்பட்டன. இதில் 2 விசைப்படகுகளும் உடைந்து நொறுங்கின. அதில் இருந்த 10 ஆயிரம் லிட்டர் டீசல், வலைகள் ஆகியவை சேதம் அடைந்தது. இதனால் ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications