தூத்துக்குடி திரேஸ்புரத்தில் ரூ.7 கோடியில் மீன்பிடி துறைமுகம்: கட்டுமானப் பணிகள் துரிதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் ரூ.7 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தூத்துக்குடியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலுக்காக மீன்பிடி துறைமுகம் உள்ளது. திரேஸ்புரம் பகுதியில் ஏராளமான நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இதற்காக இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், கட்டு மரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கு ரூ.7.32 கோடியில் மீன் துறை மூலம் சுனாமி புணரமைப்பு திட்டத்தின் கீழ் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக இங்குள்ள கடற்கரை பகுதியில் மண் நிரப்பி கரைகள் உயர்த்தப்படுகிறது. மேலும் படகுகள், கட்டுமரங்கள் நிறுத்துவதற்கு வசதியாகவும், படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களுக்கான இறங்கு தளமாகவும் இருக்கும வகையில் 320 மீட்டர் நீளத்தில் 40 மீட்டர் அகலத்தில் டயப்ரம் வால் எனப்படும் ப வடிவ சுவர்களும் அமைக்கப்படுகின்றன.
இது தவிர உள்ளே செல்ல வசதியாகவும், டீசல் உள்ளிட்டவை கொண்டு செல்ல வசதியாகவும் 10 மீட்டர் அகலத்தில் 50 நீளத்தில் கடலுக்குள் புதிய தளம் அமைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்திற்கும், கடலுக்குள் 9 மீட்டர் ஆழத்திற்கும் கான்கீரிட்டால் அமைக்கப்படுகிறது. இப்பணி முழுவதும் பைல் பவுன்டேஷன் முறையில் நடக்கிறது.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு துறைமுகம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications