திமுக முப்பெரும் விழாவில் மாற்றம்: 30-ம் தேதி சென்னையில் நடக்கிறது
சென்னை: செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடைபெறுவதாக இருந்த திமுக முப்பெரும் விழா வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேதியும், இடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
2011-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி தற்போது தேதி மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டு, வருகிற 30-9-2011 வெள்ளிக்கிழமை, சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சினைகள்-திமுக பொறுப்பாளர்கள் குழு
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு பொறுப்பாளர் குழுவை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகள் குறித்தும் - அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் கைது தொடர்பாகவும்; கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் தலைமைக் கழகத்திற்கு தொடர்பு கொள்ளும் வகையில், தலைமை கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பெ.வீ.கல்யாணசுந்தரம், ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, அ.ரகுமான்கான், வெ.ரவி, இரா.கிரிராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முழுநேரமும் பணியாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications