தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம்- ராம.கோபாலன் கைதாகி விடுதலை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
நேற்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாக நடந்தது. இந்து முன்னணி அமைப்பினருக்கு விநாயகர் ஊர்வலம் நடத்த தடை விதிக்கபப்ட்டிருந்தது. அப்படி இருக்கையில் நேற்றிரவு 7 மணி அளவில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் விநாயகர் சிலையுடன் திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் ஊர்வலமாகச் சென்றார்.
அவருடன் சில இந்து முன்னணி தொண்டர்களும் தங்கள் தலையில் விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலம் பாரதி சாலை சந்திப்பில் வந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இருப்பினும் அவர்கள் ஐஸஹவுஸ் மசூதி வழியாகச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் அனைவரும் ரோட்டில் சிலைகளுடன் அமர்ந்தனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ராம.கோபாலன், நாங்களும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் வருகிறோம். போலீசாரும் எங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி மறுக்கின்றனர். எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். நிச்சயம் ஒருநாள் வெற்றி காண்போம் என்றார்.
இதையடுத்து ஊர்வலமாக வந்த ராம.கோபாலன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நேற்றிரவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
முன்னதாக ராம.கோபாலன் ஊர்வலத்தை துவங்கி வைத்து பேசுகையில், தழகக் கோவில்களில் நடைமுறையில் உள்ள தரிசனக் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய கருத்து ஆகும். கேரளாவில் உள்ள கோவில்களில் எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி கும்பிடலாம். அங்கு பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தரிசணக் கட்டணம்?
கிராம மக்கள் 5 பைசா, 10 பைசாவை முடிந்து கொண்டு வந்து கோவில் உண்டியலில் போடுகின்றனர். ஆனால், அவர்களை ஒரு நாயைவிட கேவலமாக நடத்துகின்றனர்.
தமிழகத்தில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதல்வர் ஜெயலலிதாவை நான் மனதாரப் பாராட்டுகிறேன் என்றார்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூர் ஆலாங்காட்டில் விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் ராம கோபாலன் பேசுகையில், தமிழகத்தில் அமைந்துள்ள அரசு, பொதுமக்கள் நலனை நன்கு உணர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறது.
100 நாட்களில், மதிப்பிட முடியாத அளவு சாதனைகளை படைத்த இந்த அரசை, இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது. கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள், நில மோசடி செய்வதிலும், கோவில் நிலங்களை சுரண்டுவதிலும் அதிக கவனம் செலுத்தினர். அவர்கள் தற்போது தண்டனை பெற்று வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள மதக்கலவர தடுப்பு மசோதா அமலானால், அடிப்படை உரிமைகளை இந்து மக்கள் இழந்து வாட வேண்டியிருக்கும். அதை நன்கு உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, தடாலடியாக எதிர்ப்பு தெரிவித்து, மற்ற மாநில முதல்வர்களிடமும் ஆதரவு கேட்டு வருகிறார்.
நம் நாட்டில் இந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும் சகல வசதிகளுடன் வாழலாம். ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.
தேச துரோகிகளுக்கு இந்தியாவில் ஊசிமுனை அளவு கூட இடம் அளிக்க இந்து முன்னணி ஒப்புக் கொள்ளாது. இந்து முன்னணி, அரசியல் இயக்கமாக இல்லாவிட்டாலும், இந்து விரோத அரசை அகற்றுவதிலும், மக்கள் நல அரசை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications