எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம்- பாஜக எம்.பிக்கள் கைது ஏன்?
டெல்லி: கடந்த ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியின்போது நம்பி்க்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில், 3 முன்னாள் பாஜக எம்.பிக்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த விவகாகரமே பாஜகவின் செட்டப் நாடகம் என்ற வாதம் வலுத்துள்ளது.
அமெரிக்காவுடனான சிவில் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டன. இதையடுத்து மன்மோகன் சிங் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. இருப்பினும் லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரினார் பிரதமர் மன்மோகன் சிங்.
2008ம் ஆண்டு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்திற்கு வந்தது. அப்போது பாஜக எம்.பிக்கள் அசோக் அர்கால், பக்கான் சிங் குலஸ்தே மற்றும் மகாவீர் பகோரா ஆகியோர் பணக் கட்டுக்களை கொண்டு வந்து சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டினர். இவை எங்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம். அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அரசுத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பணம் என்று குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பாஜக குரல் எழுப்பியது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறுடெல்லி காவல்துறைக்கு அப்போதைய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்த நிலையில் சமாஜ்வாடி தலைவர் அமர்சிங் மற்றும் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பின்னணியில், இந்த நிலையில், நாடாளுமன்ற அளவிலும் ஒரு விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. கிஷோர் சந்திர தியோ தலைமையிலான அந்தக் கமிட்டி நடத்திய விசாரணையில், அமர்சிங், படேல் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், அமர்சிங்கின் செயலாளரான சஞ்சீவ் சக்சேனா, பாஜக மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் செயலாளர் சோஹைல் இந்துஸ்தானி மற்றும் சுதீந்திர குல்கர்னி ஆகியோரின் செயல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டு்ம் என்று கமிட்டி பரிந்துரைத்தது.
இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மூவர் மீதான விசாரணையை டெல்லி காவல்துறை மேற்கொண்டது.
இந்த வழக்கு ஜவ்வாக இழுத்தடித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் டெஹல்கா இணையதளம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் தகவலை வெளியிட்டது. இந்த விவகாரம் முழுவதுமே பாஜகவின் செட்டப் நாடகம் என்றும், அரசுக்கு பெரும் தர்சமங்கடத்தை ஏற்படுத்த இதை அவர்கள் செய்ததாகவும், பாஜக எம்.பி. அர்காலுக்கு இதில் தொடர்பு உள்ளதாகவும் அது கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்படி அடுத்தடுத்து பரபரப்புகள் ஏற்பட்டாலும் கூட டெல்லி காவல்துறையின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கிட்டத்தட்ட வழக்கு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், இந்தியா ரீஜுவனேஷன் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கு இழுத்தடிப்பதாக கூறி இதுகுறித்து விரைவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து டெல்லி காவல்துறையையும், மத்திய அரசையும் உச்சநீதிமன்றம் கடுமயாக சாடியது. ஏன் இத்தனை காலமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி விளக்கம் கேட்டது.
இதையடுத்து சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கிய டெல்லி காவல்துறை, கடந்த ஜூலை 17ம் தேதி சக்சேனாவைக் கைது செய்தது. இவர்தான் பாஜக எம்.பிக்களுக்குப் பணம் கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்தது. பின்னர் பணத்தைக் கொண்டு வந்து லோக்சபாவில் கொட்டிய பகோரா, குலஸ்தே ஆகியோரையும் போலீஸார் விசாரித்தனர். மேலும் ஆர்கலும் விசாரிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜூலை 20ம் தேதி ஹிந்துஸ்தானி கைது செய்யப்பட்டார். இவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும், பாஜகவுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தவும், அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 22ம் தேதி அமர்சிங்கை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். ஜூலை 24ம் தேதி ரேவதி ரமன் சிங் மற்றும் ஆர்கல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
இந்த விசாரணைகளைத் தொடர்ந்து இன்று அமர்சிங் மற்றும் குலஸ்தே, அர்கால் மற்றும் பகோரா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
லோக்சபாவில் பணத்தைக் கொட்டிய மூன்று பாஜக முன்னாள் எம்.பிக்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த விவகாரமே ஒரு செட்டப் நாடகம்தான் என்ற உண்மை அம்பலமாகியுள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications