திருக்கோவிலூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 4 சிறார்கள் நீரில் மூழ்கி பலி
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற சிறுமி உட்பட 4 பேர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியாகினர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகள் மகாலட்சுமி(14), மகன் சிவக்குமார்(12). பெங்களூரில் வேலை செய்து வரும் அருணாசலம், குடும்பத்துடன் வீரபாண்டிக்கு வந்தார்.
பிள்ளைகளை வீரபாண்டியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, சென்னையில் உள்ள உறவினர் திருமணத்திற்காக அருணாசலம் அவரது மனைவியுடன் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், நேற்று வீரபாண்டியில் உள்ள உறவினர் வீட்டின் அருகே உள்ள பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகள் திவ்யா, கோவிந்தன் மகள் சினேகா, அவளது அண்ணன் குணா ஆகியோருடன் இருவரும் விளையாடினர்.
நேற்று மதியம் மேற்கண்ட 5 பேரும் சேர்ந்து, புலிக்கல் ஏரிக்கு குளிக்க சென்றனர். மகாலட்சுமியை தவிர்த்து மற்ற 4 பேரும் தண்ணீரில் இறங்கினர். சரியான நீச்சல் தெரியாத சிவக்குமார் அங்கிருந்த குழியான பகுதிக்கு சென்று தண்ணீருக்குள் மூழ்கினார்.
அவனை காப்பாற்ற முயன்ற திவ்யாவும் தண்ணீரில் மூழ்கினாள். பின்னர் திவ்யாவை மீட்க சினேகாவும், குணாவும் முயன்றதில் அவர்களும் தண்ணீரினுள் மூழ்கினார். 4 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்குவதை கண்ட மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் ஒடிவந்து தண்ணீரில் மூழ்கிய 4 பேரின் உடல்களை மீட்டனர். ஆனால் அதற்குள் 4 பேரும் உயிரிழந்து இருந்தனர். தகவல் அறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications