'கும்பிடு' போட்டுவிட்டு எதுவுமே சொல்லாமல் திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளிநடப்பு
சென்னை: சட்டசபையிலிருந்து இன்று காலை திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறளை வாசித்து அதற்குரிய விளக்கத்தைக் கூறினார். அதன் பின்னர் சபை அலுவல்கள் தொடங்கின. அப்போது திமுக உறுப்பினர்கள் துரைமுருகன் தலைமையில் எழுந்து வெளியேறினர்.
பின்னர் வெளியே வந்த திமுகஉறுப்பினர்களிடம் எதற்காக இந்த வெளிநடப்பு என்று செய்தியாளர்கள் கேட்டபோது, முறையாக பேசிய, அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க முயன்ற எங்களை நேற்று பாதுகாவலர்களை வைத்து வெளியேற்றினர். இன்று நாங்களாகவே வெளியேறி வந்தோம். திருக்குறள் கேட்ட மன நிறைவோடு வெளியேறினோம் என்றார்.
அண்ணா அறிவாலயம், கோபாலபுரம் வீடுகளில் நில ஆக்கிரமிப்பு இருப்பதாக நேற்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் குற்றம் சாட்டினார். மேலும் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் குறித்தும் நேற்று அவையில் புகார் கூறப்பட்டது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சபாநாயகர் காவலர்களை அழைத்து வெளியேற்றினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications