என்றும் இளமையானது 'அம்மாவின்' ஆட்சி: சட்டசபையில் அமைச்சர்
சென்னை: தி.மு.க. எம்.பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் தனது கடமையை செய்கிறது. தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கலாம். அதை விட்டு விட்டு ஜனாதிபதியிடம் செல்வது ஏன்? என்று சட்டசபையில் அமைச்சர் முனுசாமி கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் ஒரு பிரச்சனையைக் கிளப்பினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவாலயத்திலும், அவரது வீட்டிலும் ஆக்கிரமித்துள்ள நிலம், தொடர்பாக எழுந்த புகாருக்கு பதில் சொல்வதாக கூறிக் கொண்டு தவறான தகவல்களை தெரிவிக்கிறார்.
அறிவாலயம் முன் பூங்கா இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் அங்கு மற்றவர்கள் செல்வதற்கு பாதை இல்லை. கோபாலபுரத்தில் அவரது வீட்டில் இருக்கும் மாநகராட்சி நிலம் பற்றியும் தவறான அளவை சொல்கிறார். (இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் காட்டினார்). எனவே அந்த நிலங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அறிவாலயத்திலும், அவரது வீட்டின் பின்புறமும் உள்ளது. இதை மீட்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கும். அவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தை மற்றவர்களும் பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். அவர் தேவை என்றால் மற்றவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார். தேவையில்லை என்றால் விட்டு விடுவார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களையே கூடா நட்பு என்று கூறினார். காங்கிரசுக்கு 125 வயது என்கிறார்கள். வயது அதிகமானாலே கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. இதுபோன்று அவர்களும் கருணாநிதி சொன்னதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் அம்மா தலைமையிலான ஆட்சி என்றும் இளமையானது. சட்டப்படி அனைத்து நடவடிக்கையையும் எடுக்கும்.
தி.மு.க. எம்.பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் தனது கடமையை செய்கிறது. தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கலாம். அதை விட்டு விட்டு ஜனாதிபதியிடம் செல்வது ஏன்? குற்றம் செய்தவர்கள் மீது காவல் துறையிடம் மனு கொடுக்கிறார்கள். அவர்கள் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்.
புரட்சித் தலைவி ஆட்சி சட்டத்தின் படி முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கருணாநிதியிடம் உள்ள மாநகராட்சி சொத்தை மீட்டு எடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications