நாளை ஓணம் பண்டிகை- ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த் வாழ்த்து

மலையாள மொழி பேசும் கேரள மக்கள் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் நடைபெறும் பாரம்பரியப் பண்டிகை இது. வீடுகளை அலங்கரித்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்தளித்து மகிழ்வது வழக்கம்.
தமிழக-கேரள மாநிலங்களின் எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் உள்ள மலையாள மக்களும் தாங்கள் உள்ள இடங்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஓணம் பண்டிகையை அடுத்து, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
வசந்தகால விழாவாக உவகையோடு கொண்டாடப்படும் திருஓணம் பண்டிகையொட்டி, மலையாள மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நாளில், அகந்தையும், ஆணவமும் அகற்றி, அன்பும் அமைதியும் சகோதரத்துவமும் வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும், மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் திருஓணம் நாளில் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன், என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
கிருஷ்ண அவதாரத்தில் வாமனனாக அவதரித்தவர் கிருஷ்ணன். அவர் கேரளாவை ஆட்சி செய்த மாமன்னன் மாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்டு மண்ணையும், விண்ணையும் அளந்து மூன்றாம் அடிக்கு வேறு இடம் இல்லாததால் தனது தலை மீதே அடுத்த காலடியை எடுத்து வைக்க கூறினார் மாபலி மன்னன்.
ஆனால் தான் இறப்பதற்கு முன், திருவோண தினத்தன்று கேரள மாநிலத்திற்கு வந்து செல்லும் வரத்தை தருமாறு மாபலி, கிருஷ்ணரிடம் கேட்டுக் கொண்டார். ஆண்டுத்தோறும், மாபலி சக்கரவர்த்தி, தனது நாட்டு மக்களை சந்திக்க வரும் நாளே திருவோண நாளாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று நல்வாழ்வு பெற தே.மு.தி.க. சார்பில் இதயமார்ந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், என விஜயகாந்த் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications