உத்தமர் என்றால் சொத்துக் குவிப்பு வழக்கில் ஒத்துழைக்க வேண்டியதுதானே?- ஜெ.வுக்குக் கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா உத்தமர் என்றால் பெங்களூர் கோர்ட்டில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் ஒத்துழைப்பு தர வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றுவதே தனது கனவு என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கக் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: மத்திய அரசின் மத்திய புள்ளி விவர நிறுவனம் 2011ல், தனது 2008-2009ல் தொழிற்சாலைகள் குறித்த ஆண்டு ஆய்வை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் வகிக்கிறது.தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் 17 லட்சத்து 74,019 பேர் தொழிற்சாலைகளில் மட்டும் பணிபுரிகின்றனர். மொத்த முதலீட்டின் வரிசையிலும் மொத்த தொழில் உற்பத்தியிலும் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

மேலும் நிகர மதிப்பு கூடுதல் அளவில் தொழிற்சாலை வரிசையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8-7-2010 தேதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தமிழ்நாடு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது. ஆக்ஸ்போர்ட் அனாலிட்டிகா என்ற ஒரு பன்னாட்டு தனியார் ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, தமிழகம் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகிறது,

2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில், அதற்கு முந்தைய திமுக அரசின் ஆட்சியில் இருந்த முதலீட்டை விட அதிகரித்த தொழில் முதலீடு ரூ 8 ஆயிரத்து 742 கோடியே 61 லட்சம். 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், அதற்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தை விட அதிகரித்த தொழில் முதலீடு ரூ. 5 லட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 லட்சம். திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு தொழில் வளர்ந்தது என்பதற்கு இந்த விளக்கங்களே போதுமென எண்ணுகிறேன்.

கேள்வி: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மூன்று மாதங்களில் புதிய சொத்து எதுவும் வாங்கவில்லை என்று அறிவித்திருக்கிறாரே?

கருணாநிதி: பொறுப்புக்கு தற்போது வந்த இந்த மூன்று மாதங்களில் எந்தப் புது சொத்துக்களையும் வாங்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். ஆனால் ஜெயலலிதா 1991-1996ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது அவருடைய சொத்துக் கணக்கு என்ன என்று மாநிலங்களவையில் ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது தெரிவித்த விவரப்படி 1-7-1991ல் அதாவது அவர் முதல்வராக ஆவதற்கு முன்பு ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பீடு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரம். அவர் ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த பின்னர், 30-4-1996ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு ரூ. 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம். இந்த அளவுக்கு வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு எப்படி வந்தது என்பதற்கான வழக்குதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலே நடந்து கொண்டிருக்கிறது.

சமச்சீர் கல்வி திட்டத்தை பிடிவாதமாக ஏற்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறியதில் உச்ச நீதிமன்றம் தலையில் குட்டியதைப் போல, சொத்து குவிப்பு வழக்கிலும் ஜெயலலிதா பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே?

சமச்சீர் கல்வி திட்ட பிரச்சினையில் அந்த திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூறியதோடு அவசர அவசரமாக பேரவையில் திருத்தச் சட்டம் கொண்டு வந்து ஜெயலலிதா நிறைவேற்றினார். சமச்சீர் கல்வி முறையில் பாடப்புத்தகங்கள் எல்லாம் அச்சடிக்கப்பட்டு விநியோகமும் முடிந்த நிலையில் பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க ஆணை கொடுத்தார்.

அந்த புத்தகங்களின் கதி என்ன? அவைகளை அச்சிட டெண்டர் எடுத்து புத்தகங்களை அச்சிட்டவர்களின் கதி என்ன? அதற்காக அரசுக்கு ஆன செலவு எவ்வளவு? இதற்கெல்லாம் அதிமுக ஆட்சியினர் பதில் கூற வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் பெங்களூரில் சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? அந்த ஒரு வழக்குக்காக ஆகின்ற செலவு எவ்வளவு? அந்த வழக்கைத் தாமதப்படுத்த ஜெயலலிதா எவ்வளவு முயற்சி செய்கிறார்? அவர் உத்தமராக இருந்தால் வழக்கை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது தானே?

சட்டசபை நடவடிக்கைகளில் தி.மு.கழக உறுப்பினர்களை எப்படியாவது கலந்து கொள்ளாமல் செய்ய ஆளுங்கட்சியினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முயற்சியிலே ஈடுபடுகிறார்கள். முதல்வரும் ஆளுங்கட்சியினரைக் கண்டிக்காமல் இருக்கிறாரே? ஊக்கப்படுத்துகிறவராக அவரே இருக்கும்போது எப்படி அவர் அதைக் கண்டிப்பார்?

6ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க வேண்டிய ஒரு அமைச்சர் கூறிய கதைக்கும், அந்த மானியத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? பொதுவாக பேரவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரைப் பற்றி அவையிலே பேசுவது மரபல்ல.

ஆனாலும் அந்த அமைச்சர் பேரவையிலே உறுப்பினராக இல்லாத மு.க. அழகிரியின் பெயரையும், கனிமொழி பெயரையும் குறிப்பிட்டுப் பேசும் போது பேரவைத் தலைவர், அந்தப் பெயர்களை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கியிருக்க வேண்டாமா? அவையில் உறுப்பினராக இல்லாதவர்கள் பற்றி குற்றச்சாட்டு கூறும் போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எழுந்து விளக்கம் தர அனுமதிக்க வேண்டாமா? அந்த அனுமதி வேண்டுமென்று கோரினால் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்வதா? இதுதான் அதிமுக ஆட்சியினரின் நீதி நிர்வாகமா? மக்களே புரிந்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+