முடங்கும் சக்கரங்கள்... முறிந்த இறக்கைகள்... 'பெரும் விபத்தை'த் தவிர்க்குமா ஏர்இந்தியா?

1932-ல் ஜேஆர்டி டாடாவால் 'டாடா ஏர் சர்வீஸ்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது ஏர் இந்தியா. 1946-ல் ஏர் இந்தியா என்ற பெயரில் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் விமான சேவையைப் பூர்த்தி செய்ய டாடாவிடமிருந்து 1948-ல் வாங்கப்பட்டது ஏர் இந்தியா. ஆரம்பத்தில் 49 சதவீத பங்குகளை டாடாவிடமிருந்து வாங்கிய இந்திய அரசு, பின்னர் சர்வதேச விமான சேவைகளை முழுவீச்சில் ஆரம்பித்ததும் 1953-ல் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை கையகப்படுத்தியது. இதே ஆண்டில், உள்நாட்டு சேவைக்கென இந்தியன் ஏர்லைன்ஸை மத்திய அரசு தொடங்கியது.
அதன் பிறகு தொன்னூறுகளின் மத்தி வரை ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டும்தான் இந்தியாவின் ஏக போக விமான சேவை நிறுவனங்களாக செயல்பட்டு வந்தன. அதே நேரம், ஒரு தொழில்முறை அணுகுமுறையை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை கடைப்பிடிக்கத் தவறியதால், நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டிய நேரத்தில் ஒரு 'கைப்புள்ள' மாதிரி முடங்கிவிட்டார் இந்த 'மகாராஜா'!
அந்தத் தருணங்களை சரியாகப் பயன்படுத்தியிருந்தாலேகூட, விமானங்களை சொந்தப் பணத்திலேயே இந்த நிறுவனத்தால் வாங்கியிருக்க முடியும்.
2001-ம் ஆண்டு ஏர் இந்தியாவை மீண்டும் டாடாவுக்கே விற்றுவிட அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்து அறிவித்தது. உடனடியாக இதனை வாங்கிக் கொள்ள டாடா குழுமம் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன்வந்தது. ஆனால் அன்றைய கடும் எதிர்ப்பு இந்த முடிவிலிருந்து வாஜ்பாய் அரசை பின் வாங்க வைத்தது.
அதேநேரம் தனியார் விமான சேவைகளுக்கு அதிக ஊக்கமளித்தது மத்திய அரசு. வாஜ்பாய், மன்மோகன் என பிரதமர்கள் மாறினாலும் ஏர் இந்தியாவை நலிவுற்ற நிறுவனமாக்கும் நோக்கம் மட்டும் மாறவே இல்லை!
2007-ல் இந்தியன் ஏர்லைன்ஸை (இந்தியன்), ஏர் இந்தியாவுடன் இணைப்பதாக அறிவித்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இந்த இணைப்பு அநாவசியமானது என்று நடுநிலையாளர்கள் எச்சரித்தபோது காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை மத்திய அரசு. இதைத்தான் இப்போதைய சிஏஜி அறிக்கையும் சுட்டிக் காட்டியுள்ளது.
ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் பணியாளர் மோதலே இன்னும் தீர்ந்தபாடில்லை. இதில் நிர்வாகம் எங்கே சீராக நடக்கும்!
ஏர் இந்தியா நிறுவனம் பற்றியோ அல்லது சிவில் விமானப் போக்குவரத்து குறித்தோ ஒன்றுமே தெரியாத நபர்களையெல்லாம் ஏர் இந்தியா சிஇஓ அல்லது நிர்வாக இயக்குநராக நியமித்ததில், பெரும் நிர்வாகக் கோளாறு. தேவைக்கும் அதிகமாக எக்கச் சக்க ஊழியர்கள், விமானங்கள், அதற்கான எரிபொருள் வாங்குவதில் தொடங்கி ஊழியர் சம்பளம் தருவது வரை எல்லாமே கடன்.... இது போன்ற காரணங்களால் ஏர் இந்தியாவின் கடன் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
2010 மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.38,423 கோடியாக இருந்தது. இன்று கிட்டத்தட்ட ரூ 49000 கோடி ரூபாயாக கழுத்தை நெறிக்கிறது.
அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கடனில், தேவைக்கும் அதிகமாக வாங்கியதாலேயே மிகப்பெரிய கடன்தாரராக நிறுவனம் மாறியது.
விமானங்களை வாங்குவதற்குத் தேவைப்பட்ட முழுத் தொகையையும் கடனாக வாங்குவது என்றும் கடனை அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்த, விமான போக்குவரத்திலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அட, அப்படியாவது அந்தக் கடனை செலுத்தினார்களா என்றால்... ம்ஹூம். மோசமான சேவை, பணியாளர்களின் ஒத்துழைப்பின்மை, ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் ஸ்ட்ரைக் அல்லது வேறு தொழிற் தகராறுகள் போன்றவற்றால் மக்களின் நம்பிக்கையை இழந்த நிறுவனமாகிவிட்டது ஏர் இந்தியா.
ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இணைந்த பிறகு அது எத்தனை பெரிய நிறுவனமாகிறது! இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு கூடுதல் பங்கு மூலதனமாக திரட்டப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.325 கோடி மட்டும்! இது எத்தனைப் பெரிய தவறான முடிவு? மத்திய அரசு எந்த வகையிலும் இந்தத் தவறைத் திருத்தவே இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்.
இந்தக் கடன்களை உடனுக்குடன் பார்த்து தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசோ, ஏர் இந்தியாவுக்கு அவ்வப்போது 1000 கோடி 800 கோடி என குறுகிய கால தீர்வை அளித்து, அப்போதைக்கு மூச்சுவிட்டுக் கொண்டால் போதும் என்று முடிவு செய்துவிட்டது.
ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு எந்தவித ஆதாயமும் இல்லாமலேயே பிற நாடுகளுடனான விமான நிறுவனங்களுக்குச் சலுகைகளை விமான போக்குவரத்துத் துறை வாரி வழங்கியது. இந்தத் தவறு இன்றும் கூடத் தொடர்கிறது.
சரி... இனி என்னதான் செய்ய வேண்டும்? ஏர் இந்தியா பிழைக்குமா... விழுந்து நொறுங்குமா?
இப்போதைக்கு சில கடுமையான, கசப்பான முடிவுகளை எடுத்தே தீர வேண்டும் என்று சிஏஜி சில யோசனைகளைக் கூறியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் பிழைக்க வேண்டும் என்றால், முதல்கட்டமாக இந்தியன் ஏர்லைன்ஸ் - ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அதுகுறித்த முறைப்படுத்தலை இப்போதே தொடங்க வேண்டும். இதற்காக நிர்வாகமும் ஊழியர் சங்கங்களும் அவசியம் பேசி கூட்டாக சில முடிவுகளை எடுத்தாக வேண்டும்.
தங்களுடைய சொந்தத் தேவைகளை ஒதுக்கிவைத்துவிட்டு நிறுவனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். நிறுவனத்தின் நிர்வாகத்தில் எந்த விதத்திலும் தலையிடாமல் அரசு ஒதுங்கியிருக்க வேண்டும்.
புதிதாக விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து மறுபரிசீலனையைத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம், சந்தை நிலவரத்தை நன்கறிந்தவர்கள் மூலம் பேசி, விலைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.
நிறுவனத்துக்கான நிதி ஆதாரங்களை அதிகப்படுத்துவது இப்போது மிக அவசியம். அரசு இனியும் காலம் தாழ்த்தி, ஏர் இந்தியாவை தாரை வார்க்காமல், கடன்களை அடைக்க வேண்டிய வழிமுறைகளைக் காண வேண்டும்.
அரசு விமான நிறுவனம் என்றால் ஏதோ எம்பிக்கள், மந்திரிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஓசிப் பயணம் அளிக்கும் நிறுவனம் என்ற நினைப்பு முதலில் ஆட்சியாளர்களுக்கு மாற வேண்டும். தொழில் முறை நிறுவனமாக இந்த நிறுவனத்தைப் பார்க்கும் மனோபாவம் முதலில் ஆட்சியாளர்களுக்கு வரவேண்டியது அவசியம்.
ஏர் இந்தியா பிழைக்க வேண்டும் என்ற விருப்பம் அரசுக்கு இருந்தால், இவற்றை உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஏர் இந்தியா என்ற நிறுவனமே காணாமல் போவதை தடுக்க முடியாது. செய்வார்களா?












Click it and Unblock the Notifications