சமரச தீர்வு மையத்தை நாடினால் வழக்குகளின் தேக்கம் குறையும்- தலைமை நீதிபதி பேச்சு
நாகர்கோவில்: சமரச தீர்வு மையத்தை நாடுவதன் மூலம் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது குறையும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ரூ.1 கோடி செலவி்ல் சமரச தீர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. மாவட்ட நீதிபதி சரவணன் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் அடிக்கல் நாட்டி பேசியதாவது,
தமிழகத்தில் 4வது மாவட்டமாக குமரியில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த மையம் சிறப்பாக செயல்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மனுதாரர்கள் வழக்கறிஞர்களை நாடி வரும்போது முதலில் இந்த மையங்களை அணுகுமாறு அவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த மையங்கள் மூலம் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றங்களை அணுகலாம்.
இதன் மூலம் வழக்குகளின் தேக்கத்தை குறைக்க முடியும். அனைவரின் ஒத்துழைப்போடு குமரி மாவட்டத்தில் இந்த மையம் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். சமரசம் என்பது மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததில்லை.
அனைத்து மதங்களின் புனித நூல்கள் சமரசம் என்ற பண்பாட்டை வலியுறுத்துகின்றன. எனவே, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சமரச மையத்தை அனைவரும் அணுக வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற தீர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications