மதுரை சிந்தாமணியில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு வைகோ உதவி
மதுரை: மதுரை, சிந்தாமணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த, இளைஞருக்கு மனிதாபிமான அடிப்படையில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மருத்துவ உதவி செய்தார்.
திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஜெயபிரசாந்த் என்பவர் நேற்று முன்தினம் சிந்தாமணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தார். இதனால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இருந்தவர்களை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அப்போது, படுகாயமடைந்த ஜெயபிரசாந்த், தனக்கு நுரையிரல் பகுதியில் குண்டடி பட்டுள்ளதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுவரையிலும் ஸ்கேன் போன்ற முக்கிய பரிசோதனைகள் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். இதற்காக உரிய சிகிச்சை பெற தன் குடும்பத்தினரிடம் போதிய நிதி இல்லை என வைகோவிடம் கண்ணீர்விட்டு கூறினார்.
இதைக் கேட்டு மனமிறங்கிய ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, உடனே, மதுரை அப்போலோ மருத்துவனையை தொடர்பு கொண்டு அங்கு சிகிச்சை பெற முயற்சி எடுத்தார். மேலும், மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்தை தொடர்பு கொண்டு, அரசு மருத்துவமனையில் இருந்து சான்றிதழ்கள் பெற்று, ஜெயபிரசாந்தை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார்.
இதற்கான சிகிச்சை செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். வைகோவின் இந்த மனிதாபிமான செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ராம் விலாஸ் பஸ்வான் கண்டனம்
இதற்கிடையே, லோக் ஜன சக்தித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தேவையற்ற துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோக் ஜன சக்தி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வித்யாதரன் தலைமையிலான குழுவினர் சம்பவம் நடந்த இடத்துக்கு 13-ந்தேதி சென்று ஆறுதல் கூறுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications