ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்

ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோடு நகராட்சி அலுவலகம் வடபுறத்தில் ராஜபாளையம் மறவர் மகாஜன சபை அலுவலகம் மற்றும் வளாகம் உள்ளது. இவ் வளாகத்தில் 7 அடி உயர வெண்கலத்திலான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் காவலாளி காம்பவுண்டு பகுதியில் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் நைசாக இவ்வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்த தேவர் சிலையை அவமதிப்பு செய்து விட்டு ஓடிவிட்டார்.
இதுகுறித்து காவலாளி மகாஜனசபை தலைவருக்கு தெரிவித்தார். இதையடுத்து நிர்வாகிகள் நடராஜதேவர், முன்னாள் தலைவர் பன்னீல்செல்வம், செயலாளர் சூரியா முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
தேவர் சிலையை அவமதித்த விஷமிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் சிலர் குதித்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. இதில் அவை சேதமடந்தன.
மதுரையில் இருந்து ராஜபாளையத்திற்கு இன்று தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. ராஜபாளையம் பஞ்சுமில் ரோடு அருகே அந்த பஸ் வந்தபோது ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த பஸ்சில் முன் பக்க கண்ணாடியும், பின் பக்க கண்ணாடியும் உடைந்து சிதறின. அதிர்ஷ்டவமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.
மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ராஜபாளையம் டி.எஸ்.பி. கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மகாஜன சபை தலைவர் நடராஜன் கூறுகையில், ராஜபாளையத்தில் எல்லா சமுதாயத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர். 10 ஆண்டு காலமாக எந்த ஒரு ஜாதி கலவரமும் இல்லை.
ராஜபாளையத்தில் சில விஷமிகள்தான் பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏமாற மாட்டோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும். எங்கள் தேவர் சிலையை அவமதித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications