ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிப்போம்: பெங்களூர் கமிஷனர் மிர்ஜி
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜகராக வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டார். இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கக்கோரி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி கூறியதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு அளி்க்க நாங்கள் தயாராக உள்ளோம். அவருக்கு இசட் பாதுகாப்பு உள்ளதால், நாங்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிப்போம். குடியரசுத் தலைவர், பிரதமர் பெங்களூருக்கு வரும்போது அவர்களுக்கு நாங்கள் பலத்த பாதுகாப்பு அளிப்பதுபோன்று ஜெயலலிதாவுக்கும் பாதுகாப்பு அளிப்போம்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவிருப்பதால் நீதிமன்ற விதிமுறைகளின்படி பாதுகாப்பு அளிப்போம். அவர் நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்துவிடுவார்கள் என்று நினைக்கிறோம். அதனால் அதற்கேற்றவாறு அதிக அளவில் போலீசாரை நீதிமன்ற வளாகத்தில் குவிப்போம். எனவே, அவர் எந்தவித பயமும் இன்றி நீதிமன்றத்திற்கு வந்து செல்லலாம் என்றார்.












Click it and Unblock the Notifications