டெல்லி குண்டுவெடிப்பு: சதித் திட்டம் தீட்டிய முக்கிய ஹூஜி தீவிரவாதி காஷ்மீரில் கைது

5 ஹூஜி தீவிரவாதிகளுடன் இணைந்து இவர் தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாக வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வுப் பிரிவான National Investigation Agency வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 7ம் தேதி காலை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே குண்டுவெடித்தது. இதில் 14 பேர் பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை பெரிய அளவில் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. இதையடுத்து இதில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தந்தால் ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இரு 9ம் வகுப்பு மாணவர்களும் பிடிபட்டனர்:
இந் நிலையில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு போலீசாருக்கு வந்த இமெயிலை அனுப்பியதாக காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரைச் சேர்ந்த ஷாரிக் அகமது, அபித் ஹூசேன் ஆகிய இருவரை நேற்று தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றும், குண்டு வெடிப்பு நடந்த பின் இவர்கள் தான் இமெயில் அனுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங், வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் குறித்த தகவல்களை வெளியிட விரும்பவில்லை. விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்பதை தெரிவிக்க விரும்பவில்லை. விரைவில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.
இந் நிலையில் ஹூஜி இயக்கத்தைச் சேர்ந்த ஹிலால் அமின் என்ற அமிர் என்ற ஹபீஸ் என்பவரை இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் ஹூஜி (ஹர்கத்துல் ஜிகாதி அல் இஸ்லாமி) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், இவர் தான் இந்த குண்டுவெடிப்புக்கான சதித் திட்டத்தை தீட்டியவர் என்றும், 5 தீவிரவாதிகளின் உதவியோடு இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினார் என்றும் தெரிகிறது.
சொகுசு பஸ்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்-உளவுத்துறை எச்சரிக்கை:
இதற்கிடையே மும்பை-குஜராத் தலைநகர் அகமதாபாத் இடையே செல்லும் சொகுசு பஸ்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிர அரசுக்கும், மும்பை போலீசுக்கும் மத்திய உளவுத்துறையான ஐபி இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.
இதையடுத்து மும்பை-அகமதாபாத் பயணிகள் மற்றும் உடமைகளை தீவிரமாக பரிசோதிக்குமாறு சொகுசு பஸ்களின் உரிமையாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். பார்சல்களை தீவிரமாக சோதித்தே ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications