உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: ராமதாஸ்
திண்டிவனம்: தமிழக அரசு வீட்டுவசதி சங்கத்திற்கு சொந்தமான இடங்களில் தான் துணை நகரம் அமைக்கவிருக்கிறது என்பதை திமுக தலைவர் கருணாநிதி புரிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததே இந்த பிரச்சினைக்கு காரணமாகும். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அமைதியாக அகற்றி இருக்க வேண்டும். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கக்கூடாது.
பறவைகளை சுடுவதற்கு கூட சட்டப்படி அனுமதி கிடையாது. துப்பாக்கி கையில் வைத்திருக்கிற காவல் துறைக்கு மக்களை சுட்டப் பொசுக்க யாரும் அதிகாரம் தரவில்லை.
இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 50,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்குற்றம் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ஆனால் வழக்கம் போலவே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்த தீர்மானத்தை முறியடிக்க இந்தியா செயல்படுவதாக செய்திகள் வெளி வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. 7 கோடி தமிழர்களின் உனர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்தியா செயல்பட வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோர் தன்டனையை குறைக்க கோரி சட்டசபையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என கட்சி வித்தியாசம் இன்றி தமிழகத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அண்ணா பிறந்தநாளில் தி.மு.க.-அ.தி.மு.க. 2 கட்சிகளும் கைதிகளுக்கு தண்டனையை குறைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. அண்ணா பிறந்த நாளில் அமைச்சரவையை கூட்டி 3 பேரின் தூக்கு தண்டனையை குறைக்க தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.
இனிவரும் தேர்தல்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். பா.ம.க. தலைமையில் சேரும் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.
புதுவையில் ரங்கசாமி புதிதாக கட்சி தொடங்கினார். மக்கள் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைத்துள்ளார். எனவே இடைத் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அங்கு ஆதரவு தரும் வகையில் மற்ற கட்சிகள் எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை.
கடந்த ஆட்சியில் துணை நகரம் அமைக்கப் போகிறோம் என்று திமுக அரசு 120 கிராமங்களை அழிக்க முயற்சி செய்தது. அதனால் தான் நான் அந்த திட்டத்தை எதிர்த்தேன். ஆனால் அதிமுக அரசோ வீட்டுவசதி சங்கத்திற்கு சொந்தமான 311 ஏக்கரில் துணை நகரம் அமைக்கவிருக்கிறது. அதனால் நான் அதை வரவேற்றேன்.
இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் கருணாநிதி தனது கட்சி நாளேட்டில் துணை நகரம் குறித்து நான் வெளியிட்டிருந்த அறிகையை பற்றி குறிப்பிட்டுள்ளார் என்றார்.
சென்னை அருகே திருமழிசையில் 311 ஏக்கரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதை அனைத்து கட்சிகளும் வரவேற்றன. திமுக ஆட்சியில் துணை நகரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் தற்போது அதிமுக ஆட்சியில் அதே திட்டத்தை வரவேற்றுள்ளதை கருணாநிதி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications