சென்னை மாநகராட்சி குடிநீர் வரி வசூலிப்பில் குளறுபடி: ரூ.11 கோடி இழப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் குடிநீர் வரி வசூலிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளால் ரூ. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய கணக்கு தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவு நீரகற்று வாரியம் சென்னை மற்றும் அம்பத்தூர் நகராட்சி குட்பட்ட சில பகுதிகளில் உள்ள 6.51 லட்ச சொத்துக்களின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றுதல் தேவைகளை நிறைவேற்றுகிறது. இங்கு குடிநீர் வரியை சென்னை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டவாறு சொத்து மதிப்பில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூல் செய்யப்பட்டது.
இதை ஆய்வு செய்தபோது 7,222 சொத்துக்களை தவறாக வகைப்படுத்தியதால் ரூ.7.67 கோடி அளவுக்கு குடிநீர் கட்டணங்களில் குறைவான மதிப்பீடு ஏற்பட்டது. குடிநீர் கட்டணங்கள் செலுத்தும் 3,539 சொத்துக்களிடம் இருந்து குடிநீர்வரி வசூலிக்காததால் ரூ.1.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
7,722 சொத்துக்களுக்கு குடிநீர் வரி கணக்கிடுவதற்காக குறைவான ஆண்டு மதிப்பினை கடைபிடித்ததால் ரூ. 8.84 கோடி இழப்பு ஏற்பட்டது. வாரியத்தின் தரவு தளத்தில் பயன்பாட்டில் உள்ள 13,017 சொத்துக்கள் தற்போதைய நிலைக்கேற்ப திருத்தம் செய்யப்படாததால் ரூ. 21.35 கோடிக்கு கேட்புகள் எழுப்பப்படவில்லை. அளவு கருவிப் பொருத்திய இணைப்புகளுக்கு தொடர்ந்து கேட்புகளை எழுப்பாததால் ரூ.1.11 கோடி இழப்பு ஏற்பட்டது.
பதிவு செய்யப்பட்ட புகார்களில் நிறைய புகார்கள் சில நொடிகளில் மற்றும் 5 நிமிடங்களில் தீர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புகார்கள் கண்காணிப்பு அமைப்பு முறையில் உள்ள தரவுகளில் நேர்மைத் தன்மையும், நம்பகத்தன்மையும் இல்லை.
அம்பத்தூர் ஐ.டி.ஐ.யில் பணியாளர் பயிற்சி திட்டத்தில் 2007-10-ல் 540 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கு பதில் 228 பணியாளர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ.க்களுக்கு தேவையான நிதி ஒதுக்காததால் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அனைத்து வட்டாரங்களிலும் ஐ.டி.ஐ. அமைக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications