'அதிமுக மேயர் வேட்பாளர் பட்டியல்': மார்க்சிஸ்ட் அதிருப்தி; தா.பாண்டியனுக்கு முழு திருப்தி!

என்று அதிமுக தேர்தல் குழுவினரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ளது தெளிவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, இடதுசாரிகள் உள்பட எந்தக் கட்சியையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதன்மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிகவும் இடதுசாரிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பின்னர், கூட்டணிக் கட்சிகளுடன் நேற்றிரவு அதிமுக பேச்சு நடத்தியது. இதில் தேமுதிக பங்கேற்கவில்லை.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. அதிமுக தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை போயஸ் கார்டனில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது மேயர் பதவிகளுக்கு தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது தொடர்பாக தங்களது அதிருப்தியை இவர்கள் வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும் தங்களுக்கு ஒரு மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதையடுத்து அதிமுக மேயர் வேட்பாளர் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது தான் என்று அதிமுக குழு கூறியுள்ளது.
அதிமுக குழுவுடன் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன், உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எம்.எல்.ஏக்கள் கே.பாலகிருஷ்ணன், தங்கவேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், நூர் முகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் சனிக்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்போது, எங்களுக்கு எந்த மாநகராட்சி ஒதுக்க வேண்டும், எந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவை வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அதிமுகவினர் போட்டியிடக்கூடிய 10 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பெயர்கள் இறுதியானதல்ல. மாறுதலுக்கு உட்பட்டது தான் என்று அதிமுக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, இதுபற்றி ஆராய்ச்சிக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. அதிமுகவுடன் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடும் இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த நேரத்தில் அதிமுகவுடனான கூட்டணி தொடருமா என்று கேட்கும் கேள்வியே தவறானதாகும். இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுக்கு பிறகு எந்த மாநகராட்சி மேயர் பதவியை கேட்டோம் என்பது பற்றி கூறுகிறோம் என்றார்.
அடுத்தபடியாக தா.பாண்டியன் வந்தார்...
இவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் அதிமுக தொகுதிப் பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை 45 நிமிடங்கள் நீடித்தது.
வழக்கமாகவே அதிமுகவுக்கு மிக சாதமாக நடந்து கொள்ளும் தா.பாண்டியன், மேயர் பதவி விவகாரத்தில் எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை என்றே தெரிகிறது.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாண்டியன், உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு சம்பந்தமாக அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு என்று முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் சனிக்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றார்.
தா.பாண்டியனுக்கு முழு திருப்தி:
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன்னிச்சையாக 10 மாநகராட்சிகளிலும் போட்டியிடும் மேயர் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளாரே?
பதில்: அது அவர்கள் முடிவு. நாங்கள் எங்கள் முடிவுப்படி நடப்போம்.
கேள்வி: இவ்வாறு 10 மாநகராட்சிகளிலும் அதிமுகவினரே போட்டியிடுவதாக அறிவித்திருப்பது உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதா?
பதில்:- உங்களுக்கு வேண்டுமானால் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். எங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தால் சொல்லியிருப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications