என் தவறுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி: நரேந்திர மோடி

குஜராத் மக்களுக்கு அவர் எழுதியுள்ள இரு கடிதங்களில் கூறியுள்ளதாவது:
அன்பு சகோதரக்களே, சகோதரிகளே, குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை சிலர் வெற்றி என்றும் வேறு சிலர் தோல்வி என்றும் கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறைகளில் எனக்குத் தொடர்பு இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி ஏற்படுத்தப்பட்ட மோசமான சூழலுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மீதும் என்மீதும் அவதூறுப் பிரசாரம் செய்வதே 'பேஷன்' என்பது போல ஆகியிருந்தது. குஜராத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே இதுபோன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வந்தனர். இதன்மூலம், ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்த முயற்சித்தனர்.
இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்திருக்கிறது. இதன் பிறகாவது என் மீதான அவதூறு பிரச்சாரம் நிறுத்திக் கொள்ளப்படுமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் இத்தனை ஆண்டுகளாகப் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டோர் மீதான நம்பகத்தன்மை இனி குறைந்து போகும் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இனி இதுபோன்ற நபர்களை, நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.
எத்தனையோ பொய்ப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் கடந்த பத்து ஆண்டுகளில் அமைதி, நல்லிணக்கம், பொருளாதாரத்தில் குஜராத் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதே பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்பதிலும் குஜராத் மக்கள் உறுதியாக உள்ளனர்.
வெறுப்பை வெறுப்பால் வெற்றி கொள்ள முடியாது. நமது நாட்டின் உண்மையான பலம் ஒற்றுமையிலும் நல்லிணக்கத்திலும்தான் இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு. இதைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
குஜராத் மாநிலத்தில், சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் பலப்படுத்தும் பொறுப்பு, எனக்கு உள்ளது. இதற்காக சத்பாவன மிஷன் என்கிற இயக்கத்தைத் இயக்கத்தை துவக்கியுள்ளேன். அதன் ஒரு பகுதியாகவே சனிக்கிழமை முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன்.
இதன்மூலம் குஜராத் மாநிலத்தின் சமூக நல்லிணக்கம், இந்த உண்ணாவிரதத்தால், மேலும் பலமாகும் என்று நம்புகிறேன்.
20ம் நூற்றாண்டு குஜராத்துக்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. 2001ம் ஆண்டு குடியரசு தினத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் நடந்த மதக் கலவரமும் ஏராளமான உயிர்களை பலி கொண்டது. பொருட் சேதங்களும் வலிகளும் நம்மை சூழ்ந்தன.
ஆனால், அதையெல்லாம் தாண்டி குஜராத் வளர்ச்சிப் பாதையில் நடை போட ஆரம்பித்தது.
உலகில் எந்த தனி மனிதரும், மாநிலமும், நாடும், சமூகமும் மிகவும் சரியாக இருப்பதாக மார்தட்டிக் கொள்ள முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக எனது தவறுகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி.
குஜராத்தின் முதல்வர் என்ற முறையில் எனது மாநிலத்தில் எந்த ஒருவருக்கும் ஏற்படும் வலியும் எனக்கு ஏற்படும் வலியாகவே கருதுகிறேன். அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை.
ஜாதி மோதலும் மத வன்முறையும் நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது நமது நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நன்றாகப் புரியும். குஜராத்தும் இதை நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டது. இதனால் தான் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் வளர்ச்சிப் பாதையை நோக்கி மாநிலம் நடை போட்டுக் கொண்டுள்ளது.
தவறுகள் நடக்காமல் இனி தொடர்ந்து மக்களுக்காக உழைத்திட உங்களது ஆசிர்வாதத்தை எதிர்நோக்கி உள்ளேன்.
எனது உண்ணாவிரதத்தின்போது, கடந்த காலங்களில் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது எனக்கு கோபமோ அல்லது கசப்புணர்வோ வந்துவிடாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வந்தே மாதரம்!
Always remains yours,
நரேந்திர மோடி
இவ்வாறு தனது கடிதத்தில் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சுத்தமான ஏமாற்று வேலை-காங்கிரஸ்:
மோடியின் இந்த உண்ணாவிரத அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை என காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இந்த உண்ணாவிரத்தால் மக்களை மோடியும் பாஜகவும் ஏமாற்றிவிட முடியாது. தனது தவறுக்கு மக்களிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்பதன் மூலமே மோடி தனது உண்மையான அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications