சென்னை-திமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது- திருச்சி செயலாளரும் நள்ளிரவில் கைது
சென்னை: சென்னை கே.கே.நகர் பகுதி திமுக செயலாளரான தனசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை வடபழனி ஆற்காடு ரோட்டில் உள்ள ரூ. 15 கோடி மதிப்புள்ள சொத்து பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தனசேகரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இங்கு பரமேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான வீட்டுடன் இணைந்த வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தின் மீது இந்து ஜனோபகாரா சாசுவத நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கப்பட்டது. கடனை திருப்பிச் செலுத்தமுடியாததால், அந்த நிதி நிறுவனம் வணிக வளாகத்தை ஏலம் விட்டது. லலிதா சுகுமாரன் என்பவர் அதை ஏலத்தில் எடுத்து லிங்கம் என்பவரிடம் விற்றுள்ளார். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், கே.கே.நகர் பகுதி திமுக செயலாளரான தனசேகரன் தனது அடியாட்களுடன் அந்த வணிக வளாகத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதை தட்டிக் கேட்ட பரமேஸ்வரியை மிரட்டுவதற்காக வளாகத்தில் இருந்த ஒரு கடையைச் சேதப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பரமேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வடபழனி போலீசார் தனசேகரன் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் தனசேகரன் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருச்சி திமுக செயலாளர் நள்ளிரவில் கைது:
அதே போல திருச்சி பாலக்கரை பகுதி திமுக செயலாளர் மண்டி சேகர் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு பாலக்கரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தபோது தகராறு செய்து வன்முறையில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் மண்டி சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, திருச்சியைச் சேர்ந்த திமுக செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications