அரசியல் நோக்கத்துக்காக கனிமொழி வழக்கை இழுத்தடிக்கிறார்கள்! - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அரசியல் காரணங்களுக்காகவே கனிமொழி ஜாமீன் வழக்கு இழுத்தடிக்கப்படுவதாகத் தெரிகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணையில் சட்ட விவகாரம் சம்மந்தமாக தொடர்புடையவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பல மாதங்கள் ஆகியும் கூட அது சம்பந்தமாக விசாரணை எதுவும் நடைபெறாமல் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல், அதற்கான வழக்கு நடைபெறுகின்ற நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் கடத்தி கொண்டேயிருக்கிறார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட ஏடுகள் கூட, இந்த வழக்கைக் காரணம் காட்டி விசாரணை செய்யாமல் டெல்லி திகார் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து கட்டுரைகளும் தலையங்கங்களும் எழுதியிருக்கிறார்கள்.

120 நாட்களுக்குப் பிறகும்....

20.6.2011 அன்று என் மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த போது நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் "ஜாமீன் கோரியுள்ள கனிமொழி, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரையில் பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர், வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் கோரி மனு செய்யலாம்'' என்று கூறியே 3 மாதங்கள் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றுகின்ற சரத்குமாரையும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் 20 சதவிகித பங்குதாரராக உள்ள கனிமொழி எம்.பி.யையும் கைது செய்து 120 நாட்களாக விசாரணை இல்லாமல் ஜாமீன் கோரும் மனுக்களையும் பெற்றுக் கொள்ளாத சூழ்நிலையில் இனி அடுத்த மாதம் தான் நீதிமன்றமே திறக்கப்பட்டு ஜாமீன் போன்ற பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் ஆராய வேண்டும் என்று இதற்காக அமைந்துள்ள நீதிமன்றம் தனது பணிகளை இப்போது ஒத்தி வைப்பதாகச் சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறது.

நேரடியாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லையே...

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் சிறையிலே உள்ள பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட போதிலும்-கனிமொழியும், சரத்குமாரும் கலைஞர் தொலைக்காட்சி சம்மந்தமான (காசோலை மூலமாகவே) கொடுக்கல், வாங்கல், கடன் வாங்கித் திருப்பிக் கொடுத்தல் என்ற நிலையிலேதான் இதிலே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்களே அல்லாமல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நேரடியான எந்தக் குற்றச்சாட்டிலும் அவர்கள் இல்லை.

இருந்த போதிலும் அவர்களையும் 120 நாட்களாக விசாரணை இல்லாமல் திகார் சிறைச்சாலையிலே அடைத்திருக்கிறார்கள்.

அரசியல் நோக்கத்தோடு

ஜாமீன் வழங்குவது சம்மந்தமாக இந்த வாரத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று நீதிமன்றமே கூறியிருந்த சூழ்நிலையில்- 'ட்ராய்' நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒரு சிலர் வாதாடியதைக் காரணமாக வைத்து 'ட்ராய்' நிறுவனத்தின் அறிக்கைக்காக நீதிமன்றமும் காத்திருப்பதாகச் சொல்லி மீண்டும் ஒரு முறை நீதிமன்ற நடவடிக்கைகள் மேலும் 15 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளையும் அவற்றுக்குச் சொல்லப்படுகின்ற காரணங்களையும் கூர்ந்து பார்க்கும்போது-இது முற்றிலும் அரசியல் நோக்கத்தோடு நடைபெறுகின்ற காரியமாக இருக்குமோ என்று தான் ஐயுறத் தோன்றுகிறது.

நீதிமன்றம்-கனிமொழி, சரத்குமார் ஆகியோர் வழக்கில் ஜாமீன் மனு கொடுப்பதற்கான காலகட்டத்தை ஏற்கனவே பல நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டிருந்தும் கூட, அதை நினைவுபடுத்தி இப்போது தரப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்காமல் அடுத்த மாதம் முதல் வார வாக்கில்தான் அது பற்றி ஆராயப்படும் என்று அறுதியிட்டுக் கூறியிருப்பதை எண்ணும்போது, இந்த ஒரு வழக்கு, மற்ற வழக்குகளைப் போல அல்லாமல், அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே வெளிப்படையாகவே தெரிகின்றது என்பதை மறைத்திடவோ; மறுத்திடவோ எவரும் முன் வர முடியாது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+