'வந்துரும்... பணவீக்கம் கட்டுக்குள் வந்துரும்!' - பிரணாப் நம்பிக்கை

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உருப்படியான வழிமுறைகளை இதுவரை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
ஒரு பக்கம் அனைத்து முக்கிய பொருள்களின் விலைகளை ஏற்றியபடி உள்ள மத்திய அரசு, வெறும் வட்டி வீதங்களை மட்டும் ஏற்றிக் கொண்டே போகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 12வது முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. வட்டி வீத உயர்வு, வெளியில் புழக்கத்தில் உள்ள பண அளவை மட்டும்தான் குறைக்குமே தவிர, பொருளின் விலையைக் குறைக்கும் மந்திர சக்தி இதற்கில்லை.
ஆனால் இந்த வட்டிவீதக் குறைப்பை மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும் பெரும் கருவியாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நம்பிக் கொண்டுள்ளன.
நேற்று 25 புள்ளிகள் ரெபோ, ரிவர்ஸ் ரெபோவை ரிசர்வ் வங்கி உயர்த்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த வட்டிவீத உயர்வானது பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது அரையாண்டில் பொருளாதார வளர்ச்சியும் கணிசமாக இருக்கும் என நம்பலாம். இன்னும் கூட வடிடி வீதம் கூட்டப்படலாம்," என்றார்.
ஆரம்பத்தில் மே மாத இறுதிக்குள் பணவீக்கம் 7 சதவீதமாகக் குறைந்துவிடும் என்று கூறிவந்த நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், இப்போது இந்த ஆண்டின் கடைசியில் ஒருவேளை பணவீக்கம் குறையக் கூடும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
மேலும் கடந்த சில தினங்களாக பொருளாதார வளர்ச்சியில் நல்ல அறிகுறிகள் தோன்றுவதாக அறிவித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.
ஆனால் உண்மையில், "இந்தக் காலாண்டுக்கான தொழில்துறை வளர்ச்சி கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.3 என வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியோ கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவான 7.7 சதவீதத்தில் வந்து நிற்கிறது!












Click it and Unblock the Notifications