பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு விஜயகாந்த் ஆறுதல்
மதுரை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது அதிமுக கூட்டணி குறித்துக் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டார்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த 17 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களைப் பல்வேறு கட்சித் தலைவர்கள் பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று மதுரை வந்தார். மருத்துவமனைக்குச் சென்ற அவர் 17 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கான வேட்பாளர்களை அதிமுக தன்னிச்சையாக அறிவித்திருப்பதால் கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுமா, தேமுதிகவின் நிலை என்ன, தனித்துப் போட்டியிடுமா என்று சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், நான் துப்பாக்கிச் கூட்டில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுதல் கூற வந்திருக்கிறேன். இங்கு அரசியல் பேச விரும்பவில்லை என்றார்.
திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை
முன்னதாக கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றத்தில் வைத்து அவசர ஆலோசனை ஒன்றை நடத்தினார் விஜயகாந்த். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா என்பது உள்ளிட்டவை குறித்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அடுத்துடுத்து அதிமுக தரப்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருவதால், தேமுதிக தரப்பில் தனித்துப் போட்டியிடலாம் என்ற எண்ணம் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications