திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் மரியம் பிச்சை போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தி பின்னர் அமைச்சரும் ஆனார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. நாளை முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம்.
26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 29ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் போட்டியிடாது என அறிவித்து விட்டது. திமுக இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறவுள்ள முதல் சட்டசபை இடைத் தேர்தல். மேலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் பண பலம் சரமாரியாக விளையாடி நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது நினைவிருக்கலாம். எனவே அதிமுக ஆட்சியின் கீழ் நடைபெறவுள்ள இந்த முதல் இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications