அம்பத்தூரை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை : சென்னை அருகே உள்ள அம்பத்தூரை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து அம்பத்தூரைக் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் அருகாமையில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மிகப் பெரிய மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. அதன் வார்டுகளும் 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சியும் இணைக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கு அம்பத்தூரைக் காப்போம் என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இணைப்பை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தை அது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சியை இணைக்கக் கூடாது. அப்படி நடந்தால் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு பேராபத்து ஏற்படும்.
அங்குள்ள தொழிற்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு செயல்பட்டு வரும் சிறிய, நடுத்தர, பெரிய தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிறுவனங்கள் மூடப்பட்டால் பல லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு அம்பத்தூர் எஸ்டேட் போய் விடும் அபாயமும் உள்ளது.
எனவே அம்பத்தூரை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications