கூடன்குளத்தோடு கல்பாக்கம் அணு மின் நிலையத்தையும் சேர்த்து மூட வேண்டும்-ராமதாஸ்
சென்னை: கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி பொதுமக்கள் இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,
வழக்கமாக மக்களுக்காக அரசியல் கட்சியினர் தான் போராட்டம் நடத்துவார்கள். ஆனால் கூடன்குளத்தில் மக்களே தங்களுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு ஆதரவாகத் தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இடிந்தகரையில் 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அங்கு 10,000-க்கும் அதிகமான மக்கள் திரண்டுள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு பாமகவின் முழு ஆதரவு உண்டு.
அணு உலைகள் மனி இனத்தை அழித்துவிடும். இதற்கு சிறந்த உதாரணம் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவில் நடந்த அணு உலை விபத்துகள் தான். மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மக்களின் எதிர்ப்பால் அணுமின் நிலையத் திட்டங்கள் கைவிடப்பட்டன.
ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் உள்ள 75 அணு உலைகள் வரும் 2020-க்குள் மூடப்படும் என்று அந்த நாடுகள் அறிவித்துள்ளன. அணு உலைகள் இருக்கும் இடத்தில் இருந்து 5 முதல் 10 கிமீ சுற்றளவு வரை கதிர் வீச்சு இருக்கும். இதனால் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும். கூடன்குளத்தில் அணு உலை அமைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக எதி்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் கருத்தை கேட்காமலேயே அணுமின் நிலையத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் மூலம் 2.7 சதவீத மின்சாரம் தான் கிடைக்கும். அபாயகரமான அணுமின் நிலையத் திட்டத்திற்கு பதிலாக அரசு மாற்று மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா கூடன்குளம் செல்ல வேண்டும். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், வி.கே. பாண்டியன். வி.கே.சேகர், சுரேஷ்பாபு, கன்னியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications