உண்ணாவிரத மேடையில் முஸ்லீம் மதத் தலைவர் வழங்கிய தொப்பியை வாங்க மறுத்த மோடி

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் 3 நாள் உண்ணாவிரதம் இருந்தார் மோடி. அப்போது அவரை பெரும் திரளானவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இஸ்லாமிய சமுதாயத்தினரும் பெருமளவில் வந்திருந்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களில் சையத் இமாம் ஷாஹி சையத் என்பவரும் ஒருவர். இவர் அகமதாபாத் அருகே உள்ள பிரானா கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள சிறிய தர்காவில் மதத் தலைவராக இருக்கிறார்.
மோடியின் மத நல்லிணக்க உண்ணாவிரதத்தாலும், அவரது பேச்சாலும் ஈர்க்கப்பட்ட சையத், மோடியைக் காண ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு வந்தார். மோடியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த, இஸ்லாமியர்கள் அணியும் தலைக் குல்லாயை வழங்கி அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் மோடி. தொப்பிக்குப் பதில் சால்வை தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து சையத்தும் சால்வையைக் கொடுத்தார். அதை மோடி வாங்கிக் கொண்டார்.
இதுகுறித்து பின்னர் சையத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடியின் உண்ணாவிரத நோக்கம் என்னைக் கவர்ந்தது. இதனால்தான் நான் அவரைக் காண வந்தேன். அவரைப் பாராட்டி தொப்பியைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அந்தத் தொப்பியை அணிந்தால் தனது இமேஜ் போய் விடுமோ என்று அவர் அஞ்சி விட்டாரோ என்னவோ தெரியவில்லை.
தொப்பியை வாங்க மறுத்தது எனக்கு அவமானமல்ல, மாறாக இஸ்லாமுக்குத்தான் அது பெருத்த அவமானம் என்றார் சைய்த வருத்தத்துடன்.
இருப்பினும் பாஜக தரப்பில் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். இதுகுறித்து மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் ருபானி கூறுகையில், பிற கட்சிகளைப் போல குறிப்பிட்ட எந்த சமூகத்தையும் கவரையும் வகையில் நரேந்திர மோடி செயல்படுவதில்லை. இதை அவர் கொள்கையாகவே வைத்துள்ளார். ஒட்டுமொத்த வளர்ச்சி, சமத்துவம் ஆகியவைதான் அவரது முக்கிய நோக்கம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து மோடியைச் சந்தித்து வாழ்த்தியுள்ளனர். ஆனால் யாருமே தொப்பி அணியுமாறு மோடியை வலியுறுத்தவில்லை. எனவே இது பெரிய பிரச்சினை இல்லை, ஆனால் எதிரிகள்தான் இதைப் பெரிதுபடுத்தத் துடிக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications