சிறையில் இருந்தபடியே தேர்தலை சந்திக்கும் கே.என்.நேரு!

திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரியம்பிச்சை விபத்தில் இறந்தார். இதைத் தொடர்ந்து இங்கு அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி போட்டியிடுகிறார். இந் நிலையில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.என்.நேரு தற்போது நில அபகரிப்பு புகாரில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் உள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி முதல் அவர் சிறையில் உள்ளார். இடையில் கடந்த 2ம் தேதி கடலூர் அருகே நடந்த மகன் அருண் திருமண நிச்சயதார்த்தத்தில் 1 நாள் ஜாமீனில் விடுதலையாகி பங்கேற்றார்.
இப்போது மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக கே.என்.நேரு, அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே சிறையில் உள்ள அவர் தேர்தலை சந்திக்க உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி ஒரு வழக்கில் தண்டனை பெற்றவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியாது. கே.என்.நேரு தற்போது விசாரணை கைதியாகவே உள்ளார்.
எனவே அவர் சிறையில் இருந்தபடியே தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
நேரு தனக்கு பதிலாக ஒருவரை வேட்புமனு தாக்கல் செய்ய பரிந்துரைக்கலாம். அவர் சார்பில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும்.
வரும் 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந் நிலையில் கே.என். நேருவின் ஜாமீன் மனு மீது வரும் வியாழக்கிழமை விசாரணை நடக்கிறது. அன்று ஜாமீன் கிடைத்தால் அவரே நேரில் மனுத் தாக்கல் செய்வார்.
ஜாமீன் கிடைக்காவிட்டாலோ அல்லது வழக்கம் போல் போலீசாரால் புதிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டாலோ சிறையில் இருந்தபடியே வேட்பு மனுதாக்கல் செய்வார்.












Click it and Unblock the Notifications