காங்கிரஸ் குளறுபடி: ஒரே பதவிக்கு பலரிடம் விருப்ப மனு வாங்கும் பல கோஷ்டிகள்

சேலம் மாவட்டத்தில், முன்பு பொறுப்பில் இருந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றிவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுத்தார் மாநிலத் தலைவர் தங்கபாலு.
சேலம் மேற்கு மாவட்டத்தில் தங்கபாலுவால் தலைவராக்கப்பட்ட எடப்பாடி கோபால் ஒரு பக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பிரதிநிதிகளிடம் விருப்ப மனு வாங்கி வருகிறார்.
அவரை மாவட்ட தலைவராக ஏற்றுக் கொள்ளாத, வாசன் கோஷ்டியினர் எடப்பாடி நகர் மன்ற தலைவர் இருசப்ப மேத்தா, தனது அலுவலகத்தில் விருப்ப மனு வாங்கி வருகிறார்.
அதே போல சேலம், கிழக்கு மாவட்டத்தில் தங்கபாலு அணியின் புது தலைவர் கல்லேரிப்பட்டி செல்வராஜ் ஆத்தூரில் உள்ள தனது அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் சத்தியா சண்முகம் தலைமையில் விருப்பமனு வாங்கி வருகிறார்.
தங்கபாலுவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.பியும், முன்னாள் மாவட்டத் தலைவருமான தேவதாஸ் சேலத்தில் உள்ள தனது அலுவலகத்தில்
வாசன் ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி வருகிறார்.
எங்களுக்கு 50 'பர்சண்டு' வேணும்...:
இந் நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு 50 சதவீத இடம் வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா.
அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்க வேண்டும் என்று அகில இந்திய தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளோம். ஏற்கனவே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இளைஞர் காங்கிரஸ் தனியாக விருப்ப மனு வாங்கியது. எவ்வளவு பேர் மனு கொடுத்துள்ளார்கள் என்ற விபரம் நாளை தெரிய வரும்.
சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்கள் ஒதுக்க வலியுறுத்தி வருகிறோம். தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதற்கிடையே நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பெண்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர்.
விருப்ப மனு அளிக்க 2 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு:
இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க 2 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தங்கபாலு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறும் தேதி இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 22ம் தேதி வரை மனுக்கள் வாங்கப்படும்.
தமிழகமெங்கும் அனைத்து மாவட்ட காங்கிரஸ் மையங்களிலும் காங்கிரஸ் சார்பில் அனைத்து உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கும் போட்டியிட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பெருவாரியான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்ப மனு அளிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்த கோரிக்கையை ஏற்று இந்த நீட்டிப்பு அறிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடைபெற்று வரும் விருப்பமனு பெறும் நிகழ்ச்சியை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் செப்டம்பர் 22-ந் தேதி வரை மனுக்களை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நெல்லையில்,,,
நெல்லை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுபவர்களிடம் இருந்து மாவட்ட தலைவர் சுந்தர்ராஜபெருமாள் (மாநகரம்), மோகன்குமாரராஜா(கிழக்கு மாவட்டம்) கொடிகுறிச்சி முத்தையா (மேற்கு மாவட்டம்), ஆகியோர் மனுக்கள் வாங்குகின்றனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த இசைவளன் மனைவி ஜூலியட் பிரேமலதா, மேலப்பாளையத்தைச் சேர்ந்த சாகுபானு ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் ஜூலியட் பிரேமலதாவுக்கு ராமசுப்பு எம்பி பரிந்துரை செய்துள்ளார். சாகுபானுவுக்கு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜபெருமாள் சிபாரிசு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications