புரூண்டி மதுபான பாரில் மர்மக்கும்பலின் துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலி
புஜும்புரா: புரூண்டி நாட்டின் தலைநகரான புஜூம்புராவில் உள்ள மதுபான பார் ஒன்றில் மர்ம குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகினர்.
மத்திய ஆப்பிரிக்காவின் சிறிய நாடான புரூண்டியில், கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் 2 தரப்பினர் மாறிமாறி தாக்கிய சம்பவங்களில், இதுவரை 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு தலைநகரான புஜூம்புராவில் உள்ள மதுபான பாருக்குள் ஒரு கும்பல் துப்பாக்கிகளுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு தள்ளியது. இதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதுகுறித்து சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒருவர் கூறியதாவது, பாருக்குள் ராணுவ உடை அணிந்த 12க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று நுழைந்தது. பாரில் இருந்தவர்களை கீழே படுக்க வைத்த அவர்கள் மீது 20 நிமிடங்கள் சரமாரியாக சுட்டனர்.
இதில் பாரில் இருந்த பொருட்களின் இடையே இறந்தவர்களின் உடல்பகுதிகள் மற்றும் ரத்தம் சிதறி கிடந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் தாக்குதல் வீரர்கள், என்றார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார் உட்புறமாக பூட்டி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் வெளியே நின்ற பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை புதைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இடநெருக்கடி மற்றும் தகுந்த வசதிகள் இல்லாததால் காயமடைந்தவர்களுக்கு தகுதி மருத்துவ உதவிகளை உடனடியாக அளிக்க முடியவில்லை. இந்த கொலை வெறி தாக்குதல் குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் பீர் குருன்சிசா தனது நியூயார்க் பயணத்தை ரத்து செய்தார். மேலும் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications