கூடங்குளம்-ஜெவுடன் பிரதமர் பேச்சு: போராட்டக் குழுவினரை சந்தித்தார் நாராயணசாமி

Subscribe to Oneindia Tamil

Narayanasamy
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் விவாதித்தார். பின்னர் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை அவர் கூடங்குளத்திற்கு அனுப்பினார்.

இன்று காலை சென்னை வந்த நாராயணசாமி சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் விமானம் மூலம் மதுரை சென்ற அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை சென்றார். அங்கு போராட்டக் குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி. வரதராஜன், அணுசக்தி கமிஷன் தலைவர் மற்றும் கல்பாக்கம் மின்நிலைய உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அணு உலை தொடர்பான போராட்டம் குறித்து கருத்துக்களை அறிந்தேன். அணு உலையை பொறுத்தவரை எவ்வித பாதிப்பும் வராது என்ற நம்பகத்தன்மை எடுத்துரைக்கப்படும். மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். மின் உற்பத்தி அடுத்தக்கட்டம் தான் என்றார்.

மாலை அல்லது இரவில் இடிந்தகரைக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கும் மக்களிடம் பேச உள்ள நாராயணசாமி, நாளை சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக தமிழக அரசு நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க இருப்பதாகவும், அதற்கு தேதி மற்றும் நேரத்தை ஒதுக்கி தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படும் வரையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் பிரதமரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டார்.

அந்த கடிதத்தை படித்த பின், பிரதமர் மன்மோகன்சிங் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது, முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதல்வர் என்றும், இந்த பிரச்சினை குறித்து அவரது வழிகாட்டுதல் தனக்கு தேவை என்றும் பிரதமர் முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சுமார் 100 பேருடன் ஆரம்பித்த போராட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து, தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதில் பங்கு கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து பேசும்போது, இந்த பிரச்சினை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாகவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை கூடங்குளம் சென்று, அந்த பகுதி மக்களுடன் கலந்து உரையாடுமாறு கேட்டுக்கொண்டதுடன், ஏற்கனவே தனது கடிதத்தில் தெரிவித்தபடி, தமிழ்நாட்டு குழுவை பிரதமர் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு பிரதமர் பதில் கூறுகையில், தான் ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் தொடர்பாக நியூயார்க் செல்ல இருப்பதாகவும், வரும் 27-ந் தேதி திரும்பி வந்தவுடன், அதற்கான நேரம் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, அறிவில் சிறந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்சினை தொடர்பாக வழிகாட்டும்படி மீண்டும் கேட்டுக்கொண்டார். பிரதமரின் ஒத்துழைப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+