அதிமுக ஆதரவாளரைத் தாக்கியதாக மடிப்பாக்கம் எஸ்.ஐ மீது புகார்!
சென்னை: வழி விடச் சொல்லி ஹாரன் அடித்ததற்காக அதிமுக ஆதரவாளர் மற்றும் அவரது மகனை மடிப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் தாக்கியதற்காக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாறு வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர். நேற்று முன்தினம் இரவு அவர் தனது மனைவி லட்சுமி, மகன் தாமோதரனுடன் பெரம்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு அடையாறுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது மகன் தாமோதரன் ஓட்டினார்.
அவர்கள் கார் திருவிக பாலம் அருகே சென்றபோது முன்னாள் ஒரு பைக்கில் ஒருவர் வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து தாமோதரன் வழி விடுமாறு ஹாரன் அடித்தார். உடனே அந்த நபர் பைக்கை நிறுத்திவிட்டு வந்து காரில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார். நான் ஒரு போலீஸ்காரன். உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என்று கூறி அசிங்கமான வார்த்தைகளால் திட்டிவிட்டு தாமோதரனை தாக்கினாராம்.
உடனே அந்த போலீஸ்காரருடன் வந்த பெண், யாரிடமோ செல்போனில் பேசியவுடன் 5 பேர் பைக்குகளில் வந்திறங்கியுள்ளர். அவர்களில் ஒருவர் சந்திரசேகரனின் முகத்தில் குத்தியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்கு வந்த அமர் என்ற போலீஸ்காரரும் தாக்கியுள்ளார்.
இது குறித்து சந்திரசேகர் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த தாக்குதலுக்கு மடிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர்-தான் காரணம் என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் 12.30 மணிக்கு உதட்டில் பிளாஸ்டருடன் சந்திரசேகரனும், அவரது மனைவி லட்சுமியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். தாக்குதலின்போது தான் அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த சட்டை, பனியனைக் காட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சந்திரசேகரனின் தம்பி வெங்கடேசன் வேலூர் கிழக்கு மாவட்டம் ஜெ. பேரவை துணை செயலாளராக உள்ளார். சந்திரசேகரனுடன், வெங்கடேசனும், சில அதிமுக நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
மடிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மீது டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications