அமைச்சர் நாராயணசாமியை சந்திக்க கூடங்குளம் போராட்டக் குழு மறுப்பு- இன்று ஜெ.வை சந்திக்கிறார்

முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் கூடங்குளம் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாராயணசாமியை பிரதமர் அனுப்பி வைத்தார். அவரும் நேற்று நெல்லை வந்தார். பின்னர் போராட்டக் குழுவினரை ராதாபுரத்தில் வைத்து சந்திக்க அவர் விரைந்தார்.
ராதாபுரம் அரசினர் விருந்தினர் மாளிகையில் போராட்டக் குழுவினரை சந்திக்கத் திட்டமிட்டு அங்கு காத்திருந்தார் அமைச்சர். இதுகுறித்தத் தகவல் இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரை வந்து சந்திக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. ஆனால் அதை போராட்டக் குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களை வந்து அமைச்சரை சந்திக்கச் சொல்லுங்கள், இங்கு வந்து பேசச் சொல்லுங்கள் என்று திட்டவட்டமாக அவர்கள் கூறினர். அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அச்சமே தேவையில்லை. இங்கு அவருக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாக போராட்டக் குழுவினரை சந்திக்க ராதாபுரத்தில் காத்திருந்த அமைச்சர் நாராயணசாமி, அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி இடிந்தகரைக்கு வந்தார். பின்னர் போராட்டக் குழுவினரை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது போராட்டக் குழுவினர் கூறுகையில், ஒட்டுமொத்த தென் தமிழகத்திற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது. இதை மூடியே ஆக வேண்டும். அதை மட்டுமே நாங்கள் ஏற்போம். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், எங்களது (மீனவர்கள்) வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான் போராட்டத்தில் குதித்துள்ளோம். எந்தக் கட்சியின் தூண்டுதலின் பேரிலும் இதில் நாங்கள் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தனர்.
அவர்களுடைய கவலைகளை பிரதமரிடம் நிச்சயம் தெரிவிப்பதாக கூறிய நாராயணசாமி பின்னர் அங்கிருந்து கிளம்பினார். கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளேன்.அவரிடமும், பின்னர் பிரதமரிடமும் போராட்டக் குழுவினரின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிப்பேன் என்ரார்.
ராமேஸ்வரம் மீனவர்களும் போராட்டம்
இதற்கிடையே, கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 1000 விசைப் படகுகளும், 500 நாட்டுப் படகுகளும் கடலுக்குப் போகவில்லை. பாம்பனில் நாளை நாட்டுப் படகு மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications