அக். 2ல் பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரைக் காக்க உண்ணாவிரதம்- நெடுமாறன் அழைப்பு

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து,
காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நகரங்களிலும் ஊர்களிலும் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என 3 தமிழர் உயிர்காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
'தண்டனை கொடுங்கள், மரண தண்டனை வேண்டாம்'
இதற்கிடையே, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு எதிரான மரண தண்டனைக்கு எதிரான பயணத் தொடக்கம் மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில்,
இந்த பரப்புரை பயணம் மூவருக்கான மரண தண்டனையை ரத்து செய்யுங்கள், மரண தண்டனை என்பதையே நீக்கி விடுங்கள் என்ற கருத்துக்களை உள்ளடக்கி, ஒரு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இந்த பயணத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இப்போது நாம் மூன்று தமிழர்களின் உயிர் பாதுகாப்பு என்பதை தான் முதண்மை செய்தியாக பேசிக்கொண்டிருக்கிறோம். அதை இன்னும் விரிவாக மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லுகிறோம். தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications