சீனாவில் தொடர் மழையால் பெரு வெள்ளம்- சிக்கி 175 பேர் பலி
பீஜிங்: சீனாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் ஏறக்குறைய 175 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுவதாக, அந்நாட்டு உள்நாட்டு அமைச்சரகம் அச்சம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்டு 83 பேர் காணாமல் போயினர். 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால், நாட்டின் 13 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் தென் மற்றும் கிழக்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சீஜியங் மாகாணத்தில் சுமார் 8,400 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 92,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். வெள்ளத்தினால் அந்நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பை அடைந்துள்ளது.
சீஜியங் மாகாணத்தில், குயன்டாக் மற்றும் டான்ங்டியோ ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகள் கடும் பாதிப்படைந்துள்ளது. ஷாங்காய் நகரில் இருந்து 155 கி.மீ. தூரத்தில் உள்ள சீயோஸன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் உயரமான மரங்கள் மற்றும் வீடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
நாட்டில் 1 லட்சம் எக்டேருக்கும் அதிகமான நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சின்ஹூயா மாகாணத்தில் இருந்து 40,000 மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் மழை பொழிவு குறைந்து, வெள்ளநீர் வற்ற துவங்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக சீனா வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வெள்ள சம்பவம் இந்தாண்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications