26-ம் தேதிக்குள் பிரசாரத் தலைவர்கள் பெயரைத் தெரிவிக்க வேண்டும்: பிரவீன் குமார்
சென்னை: திருச்சி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்கள் தங்கள் பெயர்களை வரும் 26-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் கட்சித் தலைவர்களின் பயணச் செலவு, வேட்பாளரோ அல்லது அவரது ஏஜெண்டு செலவுக் கணக்கிலோ சேராது என்று 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77-ல் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகை, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த 40 பேருக்கும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்த 20 பேருக்கும் கிடைக்கும். எனவே, அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அந்தந்த கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்யப் போகும் அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கண்ட பயண செலவு சலுகையை பெற விரும்பினால், அவர்களது பெயர்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டும்.
பொதுவாக தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 7 நாட்களுக்குள் கட்சித் தலைவர்களின் பெயரை தெரிவிக்க வேண்டும். திருச்சி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலில் பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்களின் பெயர்களை வரும் 26-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் கட்சித் தலைவர்களின் பயணச் செலவு தவிர, மற்ற அனைத்து பயணச் செலவுகளும் வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications