உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குழப்பம்-தேமுதிகவின் 7ம் ஆண்டு விழா திடீர் ஒத்திவைப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட அதிர்ச்சியிலிருந்து தேமுதிகவினர் இன்னும் மீளாத நிலையில் கோவையில் நடைபெறவிருந்த கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிகவினர் மேலும் குழப்பமடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஜெயலலிதா அழைப்பார், போய்ப் பேசலாம் என்று கூட்டணிக் கட்சிகள் காத்திருக்க, அதிமுகவிடமிருந்து அறிக்கை வெளியானது - அது கூட்டணிப் பேச்சுக்கான அழைப்பு அல்ல, மாறாக வேட்பாளர் பட்டியல்.
முதலில் பத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இந்த அதிர்ச்சியிலிருந்து கூட்டணிக் கட்சியினர் மீளுவதற்குள், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கும், அடுத்து பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கதையை முடித்து விட்டார் ஜெயலலிதா. ஒரு இடம் கூட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் அனைத்து இடங்களுக்கும் அதிமுக வேட்பாளர்களை அவர் அறிவித்தது கூட்டணிக் கட்சியினரை குறிப்பாக தேமுதிகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் இடதுசாரிகளை மட்டும் அதிமுக தரப்பு அழைத்துப் பேசி வருகிறது. ஆனால் இதுவரை தேமுதிக குறித்து எந்த சத்தமும் இல்லை. அவர்களும் பேச ஆர்வத்துடன் இருப்பதாக தெரியவில்லை. இவர்களும் கூப்பிடுவதாக தெரியவில்லை.
இந்த நிலையில், கோவையில், கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளும், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தல் குழப்பத்தைத் தொடர்ந்து விழாவை தள்ளி வைத்து விட்டார் விஜயகாந்த். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னரே இவை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications