ஜெயேந்திரர்-நீதிபதி 'பேரம்' பேசிய டேப் விவகாரம்: அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கும், புதுச்சேரி நீதிபதி ராமசாமிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பான ஆடியோ டேப் குறித்த விசாரணையை அறிக்கையை 3 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற ஊழல் கண்காணிப்புப் பிரிவு பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் சுந்தரேச அய்யரையும் ஒரு மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் வைத்து சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், ரகு, அப்பு, சுந்தரசே அய்யர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். தற்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இநத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுந்தரராஜன் என்ற வக்கீல் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஜெயேந்திரரும், நீதிபதி ராமசாமியும் தொலைபேசியில் பேசிக் கொண்ட ஒரு உரையாடல் மீடியாக்கள் மூலம் மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. அதில் வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்கக் கோரி நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசுவது போல உள்ளது. எனவே சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.
இதை கடந்த முறை விசாரித்த நீதிபதி சுகுணா, வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தார். மேலும், இந்த ஆடியோ டேப் உண்மையானதா, இல்லையா என்பதை அறிந்து சொல்லுமாறு உயர்நீதிமன்ற ஊழல் கண்காணிப்பு்ப பிரிவு பதிவாளருக்கும் உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கக் கோரி சுந்தரேச அய்யர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அய்யரின் வக்கீல் மணிகண்டன் வாதிடுகையில், சங்கரராமன் கொலை வழக்கில் 3 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் சுந்தரேச அய்யர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில், வழக்குக்குத் தடை விதித்திருப்பதால் மனுதாரர் பாதிக்கப்படுவார். எனவே அவரை டேப் வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் அதற்கு சுந்தரராஜனின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். டேப் வழக்குக்கும், சுந்தரேச அய்யருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே அவரை சேர்க்கக் கூடாது என்று அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சுகுணா, அய்யர் வக்கீலின் வாதத்தை ஏற்று அவரையும் ஒரு மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார். மேலும், ஆடியோ டேப் குறித்த விசாரணை அறிக்கையை 3 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு ஊழல் கண்காணிப்புப் பிரிவு பதிவாளருக்கும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications