சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட மயி்ல்கள் திடீரென இறந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நம் தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. அவை விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் அவ்வப்போது வேதனை அடைந்தாலும் மயிலை துன்புறுத்தாமல் பாதுகாத்து வருகின்றனர்.
குருவிகுளம் அருகே மலைப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. இவை அனைத்தும் காலை நேரங்களில் அங்குள்ள விளை நிலங்களில் இரை தேடிச் செல்வதும், மாலையில் அப்பகுதி ஆலமரங்களில் தங்குவதும் வழக்கம். அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்கா சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
நேற்று மாலை வழக்கம்போல் உலா வந்த மயில்கள் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. சில நிமிடங்களில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து விழுந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாசில்தார் சந்திரசேகர், விஏஓ கோதண்ட ராமராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது குறித்து வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மயில்கள் இரண்டை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகே மயில்கள் இறந்தது எப்படி என தெரிய வரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications