நெல்லையில் அனல் காற்றுடன் கடும் வெயில்-100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது!
நெல்லை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் நெல்லையில் மட்டும் கடும் வெயில் கொளுத்துகிறது. 100 டிகிரியைத் தாண்டி வெயில் அடித்து வருவதால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லை.
ஆனால் கடந்த 9 மாதங்களாக சரியான மழையைக் காணாமல் தத்தளித்து வரும் நெல்லை மாநகரில், வெயில் சற்றும் குறைந்தபாடில்லை. அங்கு இன்று 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்துக் கட்டியது. இதனால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலை காரணமாக நெல்லையில் நுங்கு, இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றின் விற்பனை தொடர்ந்து படு சூடாக விறுவிறுப்படைந்துள்ளது.
சென்னையில் இன்று நல்ல வெயில்
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று முதல் நல்ல வெயில் அடித்து வருகிறது. இன்று காலை முதலே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. இதனால் வீடுகளுக்குள் புழுக்கம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications