சுத்த சுயம்பிரகாசமாக தனித்து நிற்கும் திமுக- கருணாநிதி
சென்னை: நடைபெற இருக்கிற உள்ளாட்சி மன்ற தேர்தலில், சுத்த சுயம்பிரகாசமாக திமுக தனித்து நிற்கும் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: இன்னும் எத்தனை இடங்களுக்கான வேட்பாளர்கள் பாக்கியுள்ளன?
பதில்: நீதிமன்ற தீர்ப்பு காரணமாக திருச்சி மாநகராட்சிக்கான தேர்தல் தற்போது நடைபெறவில்லை. அது தவிர 7 மேயர்களுக்கு தற்போது வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சேலம், மதுரை மாநகர்களுக்கான மேயர் வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.
கேள்வி: திமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இருக்கிறதா?
பதில்: சுத்த சுயம்பிரகாசமாக திமுக தனித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: இந்த தேர்தலில் தனித்து நிற்கிறீர்களே, உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
பதில்: வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றுதான் தனித்து நிற்கிறோம்.
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: சில கட்சிகள்-எங்களுடன் ஏற்கனவே உறவாக இருந்த சில கட்சிகள் இந்த தேர்தல் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை நாங்கள் அமைக்காவிட்டாலும், ஆங்காங்கு வாய்ப்புகளுக்கேற்றவாறு தொகுதி பங்கீடு செய்து கொள்வார்கள்.
கேள்வி: இது காங்கிரசுக்கும் பொருந்துமா?
பதில்: எல்லோருக்கும் பொருந்தும்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியை விட்டு தனியாக நிற்போம் என்று நீங்கள் அறிவித்த பிறகு, அந்தக்கட்சியின் ஒரு சில தலைவர்கள் அதற்காக மகிழ்ச்சி அடைகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே?
பதில்: மகிழ்ச்சி இரு பக்கமும் இருக்கிறது.
கேள்வி: அதிமுக கூட்டணியில் இன்னும் ஒரு முடிவான நிலையை அடையவில்லை. அங்கிருந்து சில கட்சிகள் வெளியேறினால், அவர்கள் இங்கே வந்து சேர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அப்படி இருப்பதாக தெரியவில்லை.
கேள்வி: மத்தியில் காங்கிரசுடனான உங்கள் கூட்டணி தொடருகிறதா?
பதில்: தொடருகிறது. மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கிறது.
கேள்வி: உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் நேர்மையாக இந்த சூழ்நிலையில் நடத்தப்படும் என்று எண்ணுகிறீர்களா?
பதில்: நடத்தப்படும் என்று, "அய்யர்'' சொல்லியிருக்கிறார். "அய்யர்'' என்றால் தேர்தல் ஆணையரின் பெயர்.
கேள்வி: எந்தெந்த தொகுதிகள் தனி தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கான தொகுதிகள் என்றெல்லாம் அறிவிக்கப்படவில்லை. இதனால், வேட்பாளர்களை அறிவிப்பதில் சங்கடம் ஏற்படுமல்லவா?
பதில்: முன்பே இதை சொல்லியிருக்கிறேன். இதனால் திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் மிகப்பெரிய சங்கடத்தை உண்டாக்கிய காரியம் இது. ஏனென்றால் எந்தத் தொகுதி தனித்தொகுதி, எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் பொதுத் தொகுதிகள் என்று தெரியாமல் இந்தப்பட்டியலை உங்களிடம் கொடுக்கிற வரையில் நாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டிருக்கிறோம்.
கேள்வி: உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடப்பதால் முறைகேடுகளுக்கு அது வழிவகுக்கும் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லுகிறாரே?
பதில்: பல தேர்தல்கள் பல நேரங்களில் உள்ளாட்சி மன்றங்களுக்கு மாத்திரமல்ல. சட்டமன்றங்கள், பாராளுமன்றங்களுக்குக்கூட இரண்டு கட்டமாக தேர்தல்கள் நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் டாக்டர் ராமதாஸ் சொல்வது போல சில பிரச்சினைகள், சங்கடங்கள் இதனால் ஏற்படும் என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.
கேள்வி: டாக்டர் ராமதாஸ் பேசும்போது, திராவிட கட்சிகளோடு தாங்கள் கூட்டணியே வைக்கமாட்டோம் என்று இழிவாக பேசியிருக்கிறாரே?
பதில்: மற்ற கட்சிகளை பற்றி இழிவாக பேசுவது, அதிலும் குறிப்பாக திராவிட கட்சிகளைப்பற்றி, திமுக வைப்பற்றி டாக்டர் ராமதாஸ் இழிவாக பேசுவது என்பது புதிதல்ல. அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை.
இடைத்தேர்தல்-திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் பணிக் குழு நியமனம்:
இதற்கிடையே திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக் குழுவை திமுக அமைத்திள்ளது.
இதில் எ.வ.வேலு, என்.செல்வராஜ், திருச்சி செல்வேந்திரன், திருச்சி என்.சிவா எம்.பி., அழகு. திருநாவுக்கரசு, ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி., டி.எம்.செல்வகணபதி எம்.பி., நன்னியூர் ராசேந்திரன், கே.என்.சேகரன், பா.பரணிகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications