கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதிகளுக்குள் மோதல்- ஒருவர் அடித்துக் கொலை
கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட அடி-தடியில் தகராறில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மத்திய சிறையி்ல அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதிகள் கந்தவேல், அய்யனார். சிறையின் 8வது பிளாக்கில் உள்ள 26 சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேருக்கும் கடும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
சிறைக்குள் ஏற்பட்ட சத்தம் கேட்டு 26வது அறைக்கு வந்த காவலர்கள் பார்த்த போது, கைதிகளிடையே மோதல் நடந்து கொண்டிருந்தது. 2 பேரையும் விலக்கிவிட்ட காவலர்கள், அதிகமாக காயமடைந்திருந்த கந்தவேலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கந்தவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், கந்தவேலுக்கும் அய்யனாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கைகள் மற்றும் உணவு வழங்கும் தட்டுகளால் மாறிமாறி தாக்கிக் கொண்டதில், கந்தவேல் இறந்தது தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கடலூர் நீதிபதி சுகந்தி சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications