அணு உலைகள் விவகாரத்தில் புதிய கொள்கை தேவை: தா.பாண்டியன்
மதுரை: அணு உலைகள் நிறுவுவதில் மத்திய அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என 40 கிராமங்களைச் சார்ந்த மக்களின் சார்பில் 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரம் மேற்கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் களமிறங்கினர்.
மக்களின் இந்த விருப்பத்தை உணர்ந்த தமிழக முதல்வர் அமைச்சரவை கூட்டி முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. நிலநடுக்கங்களும், சுனாமிகளும் அதிகரித்து வரும் இன்றைய காலத்தில் ஜப்பான் புகிசிமாவுக்கு பின்பு உலக முழுவதிலும் பெரும் அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கூடங்குளத்தை ஒட்டிய மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் மக்களிடம் எற்பட்ட அச்சம் தான் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய அரசு வெளிப்படையான நடவகிக்கையை மேற்கொள்ளவில்லை.
கூடங்குளத்தை ஒட்டியுள்ள கிராமப் பஞ்சாயத்துகள் அனைத்திலும் அணுஉலை வேண்டாம் என்ற தீர்மானத்தை இயற்றியுள்ளன. மேலும், அணுஉலை செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும். எனவே, புதிய அணுஉலைகள் நிறுவுவதில் புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications