பாசத்தோடு பழகிய அதிமுகவினரை இழந்து விட்டேனே... மாஜி திமுக எம்.எல்.ஏ. வேதனை!
பொள்ளாச்சி: திமுகவில் சேர்ந்ததன் மூலம் பாசத்தோடு பழகிய ஆயிரக்கணக்கான அதிமுகவினரையும், நண்பர்களையும் இழந்ததுதான் மிச்சம் என்று கூறியுள்ளார் திமுகவிலிருந்து முழுக்கு போட்டுள்ள முன்னாள் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. வி.பி.சந்திரசேகர்.
திமுகவிலிருந்து விலகி விட்டார் வி.பி.சந்திரசேகர். இவர் மாநில திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
தனது விலகல் குறித்து அவர் கூறுகையில்,
டந்த 5 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக்கழகத்தில் உறுப்பினராக சேர்ந்து பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தேன். தி.மு.க.வின் நடைமுறைகள் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, குடும்ப அரசியல் ஆகியவற்றை கண்டித்து தி.மு.க. உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் என்னை இன்று முதல் விடுவித்து கொள்கிறேன்.
இனி எனக்கும் தி.மு.கழகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த இயக்கத்தில் சேர்ந்ததன் மூலம் குடும்ப பாசத்தோடு பழகி வந்த ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களையும், பல ஆண்டுகளாக பழகி வந்த நண்பர்களையும் இழந்தது மட்டுமே தி.மு.க.வில் எனக்கு கிடைத்த பலன். தி.மு.க.வில் சேர்ந்ததே என்னுடைய அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு என்பதை நான் உணர்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்தபடியாக வி.பி.சந்திரசேகர் விரைவில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications