முல்லைபெரியாறில் புதிய அணை உறுதி: தமிழகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- கேரள முதல்வர்
டெல்லி: கேரள மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம். இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி டெல்லிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரிடம் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
தமிழகத்திற்கு தண்ணீர் தர நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் கேரள மக்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம்.
கேரள மக்களின் பாதுகாப்புக்காகத் தான் புதிய அணை கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை 117 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது மிகவும் பழமையான தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்டது.
புதிய அணை கட்டினால் அது தங்கள் நலனுக்கு எதிரானது என்று நினைத்துக் கொண்டு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் தண்ணீர் தேவை அதிகம் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் தண்ணீர் தர மறுக்கவில்லை.
இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications