ஊழலுக்கு எதிரான அத்வானியின் ரத யாத்திரை- தொடங்கி வைக்கிறார் நிதீஷ் குமார்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதம் இருந்தபோது அவரை வாழ்த்த நிதீஷ் குமார் வரவில்லை. மேலும், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவும் முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாஜக தலைவர் நிதின் கட்காரி சமரச முயற்சிகளில் இறங்கினார். நிதீஷ் குமாரைத் தொடர்பு கொண்டு பேசிய கட்காரி, அத்வானி மேற்கொள்ளவுள்ள ரத யாத்திரையைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு தற்போது நிதீஷ் குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இடையே ஏற்பட்ட உரசல் சீராகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் படு ஆவேசமாகப் பேசினார் அத்வானி. அதைத் தொடர்ந்து ஊழலை எதிர்த்தும், நல்லாட்சி கோரியும் நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப் போவதாக அவர் அறிவித்தார். இதனால் அவர் பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாக பேச்சு எழுந்தது.ஆனால் அதிரடியாக நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருந்து, அத்வானி மீது திரும்பிய போக்கஸை தன் பக்கம் திருப்பி விட்டார்.
இந்தப் பின்னணியில்தான், அத்வானியின் ரத யாத்திரையைத் தொடங்கி வைக்க நிதீஷ் குமார் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளான அக்டோபர் 11ம் தேதி அவர் பிறந்த சிதாபதியாரா கிராமத்தில் ரத யாத்திரையை தொடங்கி வைக்கிறார் நிதீஷ் குமார்.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவர்கள் கூறுகையில், மோடியின் உண்ணாவிரதத்தை நிதீஷ் குமார் புறக்கணித்ததைத் தொடர்ந்து நிதின் கட்காரி நிதீஷ் குமாரைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அத்வானியின் ரத யாத்திரையைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நிதீஷ் குமார் சம்மதம் தெரிவித்தார். அக்டோபர் 11ம் தேதி ரத யாத்திரை தொடங்கி வைக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க மாட்டார். நிதீஷ் குமார் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரே முதல்வராக இருப்பார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications