2ஜி: ப.சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை - பிரதமர் மன்மோகன் சிங்
நியூயார்க்: 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழலில் ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் பி.ஜி.எஸ். ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனர் வினி மகாஜனுக்கு கடந்த மார்ச் மாதம் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகே இந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்தை ஆர்டிஐ சட்டப்படி பெற்று, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த கடிதம் விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடு்த்து பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ப. சிதம்பரம் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
நியூயார்க் சென்றுள்ள பிரதமரிடம் அங்குள்ள நிருபர்கள் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றார்களே என்று கேட்டதற்கு, 2ஜி விவகாரத்திற்காக சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை.
பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்துவது ஒன்றும் புதிதன்று. அரசுக்கு எதிராகப் பேசுவது தான் அவர்கள் வேலை. அதனால் அவர்கள் கோரிக்கை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ப. சிதம்பரத்தை ஆதரிப்பது போன்று பிரணாப் முகர்ஜியையும் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, அனைத்து மந்திரிகளும் என் முழு நம்பிக்கையைப் பெற்றவர்கள் தான் என்றார்.
பிரணாப் முகர்ஜி இன்று நியூயார்க்கில் பிரதமரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications